தம் பெற்றோரைப் பெருமைப்படுத்த தாம் இன்னும் பலவற்றைச் சாதிக்க வேண்டியுள்ளது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
பெற்றோருக்கு திரையுலகம் குறித்து அதிகம் தெரியாது என்றும் தாம் பெற்றுள்ள பல்வேறு விருதுகளின் முக்கியத்துவம் குறித்து தெரியவில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு நடிகையின் பணியைப் பற்றி என் பெற்றோருக்கு முழுமையான புரிதல் இல்லை. திரையுலகம் குறித்து அவர்கள் இருவருக்கும் ஒன்றுமே தெரியாது.
"எனினும் எனக்குத் தேவையானதை எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். என்னுடைய மகிழ்ச்சிதான் அவர்களுக்கு மற்ற எதையும்விட முக்கியமானது.
"தொடக்கத்தில் எனது செயல்பாட்டால் அவர்களுக்கு பல்வேறு வகையிலும் பொருளியல் சிக்கல்கள் ஏற்பட்டன. எனக்காக அவர்கள் பட்ட பாடுகள் எல்லாம் நன்கு தெரியும். அதனால்தான் அவர்கள் என்னைப் பற்றி உண்மையாகவே பெருமைப்படும்படி பலவற்றைச் செய்ய விரும்புகிறேன்.
"இதைவிட எனக்கு வேறு பெரிய இலக்கு இருக்க முடியாது. இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. நிச்சயமாக ஒருநாள் என்னைப் பற்றி பெற்றோர் பெருமிதம் கொள்வர்," என்கிறார் ராஷ்மிகா.

