ஆண்களுக்கு நிகராக சம்பாதித்தாலும்கூட வீட்டு வேலைகள் என்று வரும்போது பெண்கள்தான் செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது என்கிறார் ராதிகா ஆப்தே.
சிறு வயது முதல் இதுபோன்ற சூழலை தனது வீட்டிலேயே பார்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"என் பெற்றோர் சொந்த மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். என் தந்தைக்கு நிகராக தாயாரும் மருத்துவமனையில் பணிகளைக் கவனிக்கிறார். எனினும் மாலை வீடு திரும்பிய அடுத்த நொடியே என் தாயார் குடும்பத் தலைவியாக மாறிவிடுகிறார்.
"சமையலில் தொடங்கி அனைத்து வீட்டு வேலைகளையும் அம்மாதான் செய்வார். ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்க அவரது மனம் முன்வரவில்லை.
"நல்ல குடும்பத் தலைவி என்று பெயர் வாங்குவதற்காக பெண்கள் தியாகங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கும் சில கனவுகள், லட்சியங்கள் இருக்கும்.
"இதைக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் புரிந்துகொண்டு செயல்பட்டால் சிக்கல் இருக்காது.
"அந்த வகையில் நாம் வாழும் சமூகத்தில் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது," என்கிறார் ராதிகா ஆப்தே.

