இனி ஒரு படத்தின் வெற்றி தோல்வி தொடர்பான அம்சங்களை ஆய்வு செய்த பிறகே புதிய படத்தில் நடிப்பது குறித்து முடிவெடுக்கப் போவதாகச் சொல்கிறார் நடிகை சம்யுக்தா.
தனுஷுடன் இவர் இணைந்து நடித்த 'வாத்தி' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பெரும் வசூலைப் பெற்றுள்ளது. இதனால் இரு மொழிகளிலும் புதுப்பட வாய்ப்புகள் குவிகின்றனவாம்.
எனினும் அவற்றை ஏற்றுக்கொள்வதில் சம்யுக்தா அவசரப்படவில்லை. 'வாத்தி' படத்தையடுத்து தமிழில் இரண்டு பெரிய நிறுவனங்கள் கால்ஷீட் கேட்டு இவரை அணுகியுள்ளன.
அந்நிறுவனங்கள் தேர்வு செய்துள்ள இரண்டு கதைகளைக் கேட்டுள்ளாராம். ஆனால் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
காரணம், தெலுங்கில் தற்போது நடித்து முடித்துள்ள 'விருபக்ஷா' படத்துக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்.
"மிக வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிறது 'விருபக்ஷா'. கடந்த 1990களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 'ருத்ராவனம்' என்ற குக்கிராமத்தில் நடக்கும் கதை.
"மலைக்கிராமமான அங்கு 150 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. அவர்களுக்கென தனிப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் உள்ளன.
"அக்கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற இளம்பெண் எந்தக் கவலையும் இன்றி உற்சாகமாக வலம் வருகிறாள். அவளுக்கு ஏற்படும் அனுபவங்கள் படம் முழுவதும் விவரிக்கப்படும்.
"இதுபோன்ற கதாபாத்திரத்துக்காகத்தான் இந்நாள் வரை காத்திருந்தேன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் சுவாரசியமான கதாபாத்திரம்.
"மலைக்கிராம இளம்பெண்ணாக என்னை திரையில் அழகாகக் காட்டி உள்ளனர். இதற்காக மொத்த படக்குழுவும் உழைத்தது எனலாம். அதனால் ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்," என்கிறார் சம்யுக்தா.
இந்தப் படத்தில் நடித்து முடிப்பதற்குள் தெலுங்கு மொழியில் சரளமாகப் பேச வேண்டும் என்று தமக்குத்தாமே இலக்கு நிர்ணயித்துக்கொண்டாராம். அது மட்டுமல்ல, தெலுங்கு ஆசிரியர் ஒருவரையும் பணியமர்த்தி பயிற்சி பெற்றுள்ளார்.
"விருபக்ஷாவின் கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே அதில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன். பிறகு வசனப் பகுதிகளைப் படித்துப் பார்த்தபோது, மொழி தெரியாமல் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது பெரும் தவறு எனத் தோன்றியது.
"ஏனெனில் உயிரோட்டமுள்ள அத்தகைய வேடங்களை ஏற்று, மொழி தெரியாமல் வசனங்களைப் பேசுவது நியாயமற்றது. மொழி தெரியாமல் வெற்றி பெற முடியாது என்றும் கருதினேன். கொரோனா நெருக்கடி காலத்தில் கிடைத்த ஓய்வை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு பயிற்சியாளரை நியமித்து இயன்ற வேகத்தில் அம்மொழியைக் கற்றுக்கொண்டேன்," என்கிறார் சம்யுக்தா.
'விருபக்ஷா' படத்துக்காக இவர் பழைய ஆடைகளை உடுத்தி நடித்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிப்புக்காக இளம் நாயகி ஒருவர் இந்த அளவுக்கு தன்னை அர்ப்பணித்தது பாராட்டுக்குரிய என ஒரு தரப்பினர் சம்யுக்தாவை பாராட்டி வருகின்றனர்.
ஆனால், இந்தத் தகவல் உண்மை அன்று என்கிறது நாயகி தரப்பு.
"மலைக்கிராம இளம்பெண் என்பதால் புது உடைகளை வாங்க வசதி இருக்காது. எனவே பழைய உடைகளை அணிய வேண்டி இருந்தது. இதற்காக படக்குழுவினர் புது உடைகளை வாங்கி, அதை ஒருமுறைகூட பயன்படுத்தாமலேயே, பலமுறை துவைத்தனர். இதனால் புத்தாடைக்குரியது பொலிவு இருக்காது. அந்த உடைகளைத்தான் பயன்படுத்தினேன்," என்று விளக்கம் அளித்துள்ளார் சம்யுக்தா.
'வாத்தி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பார்வை தன் பக்கம் திரும்பியதில் மகிழ்ச்சி என்று குறிப்பிடுபவர், தமிழில் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடிக்க விருப்பம் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்.
விஜய், அஜித், சூர்யா என சம்யுக்தாவின் விருப்ப நாயகர்களின் பட்டியல் நீளமாக உள்ளது. பல்வேறு மொழிகளில் நடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
சம்யுக்தா
ப, : தமிழகத்

