மோனலிசா
"ஒரு திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்கள் முன்னால் வரை, படத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்போம். சில காட்சிகள் நீக்கப்படும் வாய்ப்புகளும் சில காட்சிகள் நீட்டிக்கப்படும் சூழலும் இறுதி வாரம் வரை நிலவும்," என்கிறார் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்.
வரலாற்றுப் புனைவுகளை திரைப்படமாக்குவது பொதுவாகவே சவாலான ஒன்று. அதிலும் ஐந்து பாகங்களைக் கொண்ட மக்கள் மத்தியில் பிரபலமான புதினத்தைக் காட்சிகளாக உருவாக்கி, சுவாரசியம் குறையாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் தொகுப்பதில் பல்வேறு சவால்கள் இருந்ததாகச் சொல்கிறரா் திரு ஸ்ரீகர்.
இயக்குநரின் திரைக்கதை கலந்துரையாடல் நாளிலிருந்தே ஏறத்தாழ மூன்றாண்டு காலமாக இத்திரைப்படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வரும் திரு ஸ்ரீகர், இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் மொத்தமாக நடைபெற்றதாகவும் முதல் பாகம் வெளியான அன்று முதலே இரண்டாம் பாகத்தின் படத்தொகுப்பு வேலைகள் தொடங்கியதாகவும் கூறினார்.
இயக்குநரின் திரைக்கதையைப் படித்த பின்னரே 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தைப் படித்ததாக கூறிய ஸ்ரீகர் பிரசாத், ஒரு படத்தொகுப்பாளராக இயக்குநரின் சிந்தனையைக் காட்சிகளின் கோர்வையில் பிரதிபலிக்க வேண்டிய கடமை தமக்கு உள்ளதாகத் தெரிவித்தார்.
"அதனால்தான் முதலில் திரைக்கதையைப் படித்தேன். பிறகு புத்தகத்தில் உள்ள வேறு ஏதேனும் சம்பவம் முக்கியம் என்று கருதினால் அவருடன் கலந்தாலோசித்தேன். இயக்குநர் மணிரத்னத்துடனான கலந்துரையாடல்கள் எப்போதுமே ஆக்ககரமாக இருக்கும்," என்றும் அவர் பகிர்ந்தார்.
அதீத திட்டமிடல், நேர்த்தியான முன்னேற்பாடுகளுடனும் இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் இதுநாள் வரை நடைபெற்றதாகக் குறிப்பிட்ட ஸ்ரீகர் பிரசாத், இத்திரைப்படத்தின் காட்சிகளை மெருகூட்டும் பணி சவால்கள் நிறைந்ததாக இருந்தது என்றும் நீண்ட நாள்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவித்தார்.
"முதல் முறையாக இயக்குநர் மணிரத்னத்துடன் 'அலைபாயுதே' திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினேன். மணிரத்னம், திரைப்பட தொழில்நுட்பவியலாளர்களுக்கு மிகுந்த மதிப்பும் முன்னுரிமையும் அளிப்பார். ஒவ்வொரு முறையும் அவருடைய திரைப்படங்களிலும் புதிய உத்திகளைக் கையாண்டு கதைசொல்லும் சோதனை முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் கிடைக்கும்," என்று பாராட்டுகிறார் ஸ்ரீகர் பிரசாத்.
இளம் வயதில் செய்தியாளராக ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த திரு ஸ்ரீகர், தன்னுடைய தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் படத்தொகுப்புத் துறையில் பணியாற்றவே இத்துறை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தின் பேரிலேயே முதலில் இப்பணியைத் தொடங்கினார்.
நாளடைவில் இப்பணியில் உள்ள நேர்த்தியும் நுணுக்கமும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புத்தாக்க சிந்தனைகளைச் செயல்படுத்திப் பார்க்கும் போக்கும் இவரை வெகுவாக கவர்ந்தன. ஒரு ரசிகனின் கவனத்தை இரண்டரை மணி நேரம் சிதறடிக்காமல் கட்டிப்போடும் பணியும் அதற்கான திறனும் இன்றுவரை தம்மை உற்சாக நடைபோட வைப்பதாகச் சொல்கிறார் திரு ஸ்ரீகர்.
"ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையே என்னை முன்னகர்த்திச் செல்கிறது. முன்பெல்லாம் நாள்தோறும் ஏறத்தாழ 18 மணி நேரத்திற்கும் மேல் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அண்மைக்காலமாகத்தான் பத்து மணி நேரத்திற்குள் பணிகளை முடிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுகிறேன்.
"சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பாவிக்கப்படாமல் மனித வாழ்வினை கண்முன் பிரதிபலிக்கும் கலையாக கொண்டாடப்பட வேண்டும். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்திய அளவில் படத்தொகுப்புத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்தி, இத்துறைக்கு என்னால் முடிந்த பங்கை ஆற்றுகிறேன்," என்கிறார் திரு ஸ்ரீகர்.
40 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்படத்துறை அனுபவத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் இதுவரை 600க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றவர் திரு ஸ்ரீகர். இதுவரை மொத்தம் ஒன்பது தேசிய விருதுகளும் அதிக மொழிகளில் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக லிம்கா சாதனை விருது உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
ஒரு திரைப்படத் தொகுப்பாளராக திரு ஸ்ரீகர் பிரசாத்தின் பல்வேறு சுவாரசிய அனுபவங்கள் பற்றியும் பொன்னியின் செல்வன் பாகம் 1,2 திரைப்படங்களில் இவருடைய பங்கு குறித்தும் மேலும் அறிய தமிழ் முரசிற்காக இவர் அளித்த பிரத்தியேக இணையவழி பேட்டியை https://youtu.be/TwM8NwdO9Iw காணலாம்.
மணிரத்னத்துடன் ஸ்ரீகர் பிரசாத். படங்கள் ஸ்ரீகர் பிரசாத்

