முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான பிரியன் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
மிஷ்கின், மகிழ்திருமேனி போன்ற இயக்குநர்களின் படங்களில் இவர் இயற்றிய பாடல்கள் நிச்சயம் இடம்பெற்று இருக்கும்.
'எகிடு தகிடு' ('சித்திரம் பேசுதடி'), 'உனக்காக வருவேன்' ('பிச்சைக்காரன்') உள்ளிட்ட பாடல்களை எழுதியவர் பிரியன்.
இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். மேலும் தமது பயிற்சிப் பட்டறை மூலம் ஏராளமான இளம் பாடலாசிரியர்களுக்கு பாடல் எழுதும் பயிற்சி அளிக்கும் பிரியன், 'அரணம்' படத்தில் இயக்குநராகவும் நாயகனாகவும் களமிறங்கி உள்ளார்.
"ஒரு பெரிய ஜமீன் வீடு. அந்த வீட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அந்த மரணத்துக்குப் பிறகு அவ்வீட்டில் பேய் இருப்பதாக நம்புகிறார்கள்.
"அந்த வீட்டில் பிறந்தவர்தான் நாயகன். திருமணமாகி சென்னையில் வசிக்கும் நாயகன், தனது தாத்தாவின் மறைவுக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
"கிராமத்துக்கு வந்தபிறகு நாயகனும் அவருடைய மனைவியும் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அவற்றை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை," என்கிறார் பிரியன்.

