அண்மைய சில ஆண்டுகளாக தனக்கான கதைகளையும் படங்களையும் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.
அவரது நடிப்பில் உருவாகி வரும் 'டக்கர்' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யன்ஷா நாயகியாக நடிக்கிறார்.
"தற்போது வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை திகில், மர்மங்கள் நிறைந்த படைப்புகளாகவே உள்ளன. எனவே ஜனரஞ்சகமான படத்தை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என யோசித்த போதுதான் 'டக்கர்' கதை உருவானது. 'டக்கர்' என்றால் மோதல் என அர்த்தம்.
"எந்த விஷயத்திலும் விட்டுக்கொடுக்காத, பிறர் கருத்தை ஏற்காத 'ஈகோ' அதிகம் உள்ள கதாநாயகன். மறுபக்கம் முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட நாயகி. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
"இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. சின்னச் சின்ன சம்பவங்களால் இருவரும் மோதிக் கொள்வார்கள். பிறகு சில விஷயங்களுக்காக இணைந்து செயல்படுவார்கள்.
"காதல், மோதல், எதிர்மறை நகைச்சுவைக் காட்சிகள் என சுவாரசியமாக நகரும். அதனால் படம் முடியும்வரை ரசிகர்களின் கவனம் வேறு எங்கும் சிதறாது," என்று உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ்.
இவர் இயக்குநர் சங்கரின் பாசறையில் இருந்து வந்தவர். இவரது முதல் படம் 'கப்பல்'. அதை சங்கரின் சொந்தப்பட நிறுவனம்தான் வெளியிட்டது.
"பொதுவாக ஒரு படத்தை உருவாக்க நல்ல கதை தேவை. கதை தயாரானதும் அதில் நடிக்க ஒரு கதாநாயகன் முன்வர வேண்டும். கதையைப் படமாக்க நல்ல தயாரிப்பாளர் அமைய வேண்டும். இவை அத்தனையும் சாத்தியமான பிறகுதான் பட வேலைகள் தொடங்கும். எனவே ஒரு படத்தை வெளியிடுவதற்கு முன்பு பலவற்றைக் கடந்துவர வேண்டியிருக்கும்.
"அப்படித்தான் 'டக்கர்' படம் உருவாகி உள்ளது. சித்தார்த் எனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார். அவரைப் போன்ற அனுபவம் உள்ள கதாநாயகன் இந்தக் கதையில் நடிப்பது பெரும் பலம்," என்கிறார் கார்த்திக் ஜி.கிரிஷ்.
கதைப்படி, காதல் என்றால் அழகான உணர்வு என்று நம்புகிறார் சித்தார்த். ஆனால் காதல் என்பது வெறும் பம்மாத்து என்றும் உடலுறவுக்கு மற்றொரு பெயர்தான் காதல் என்றும் நம்புகிறார் நாயகி திவ்யன்ஷா.
இவ்வாறு எதிரெதிர் கருத்துகளும் செயல்பாடுகளும் கொண்ட இருவரிடையே காதல் மலர்ந்தால் என்னவாகும் என்பதுதான் 'டக்கர்' படம்.
சித்தார்த் ஓட்டுநர் கதாபாத்திரத்தில் வருகிறார். கார் நிறுவன உரிமையாளராக நடித்துள்ளார் திவ்யன்ஷா.
யோகி பாபுவுக்குத் தந்தை, மகன் என இரட்டை வேடங்களாம். முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதால் அதிகம் மெனக்கெட்டுள்ளாராம்.
"தனது கதாபாத்திரத்துக்காக சித்தார்த் உடல் எடையைக் குறைத்து, கிட்டத்தட்ட கல்லூரி மாணவரைப்போல் மாறிவிட்டார். ஒருவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப காட்சி அளிப்பது மிக முக்கியம் என்று அடிக்கடி சொல்வார். நம் மனதில் உள்ள காட்சியமைப்பை எப்படி அவரிடம் முழுமையாக விவரிப்பது என ஒருசில சமயங்களில் யோசிக்கத் தோன்றும். ஆனால் காட்சி அமைப்பை விளக்கிய பின்னர், சில நிமிடங்களில் தயாராகிவிடுவார். அதன் பிறகு அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, நாம் எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக இருக்கும்.
"திவ்யன்ஷா வளர்ந்து வரும் கதாநாயகி. நாம் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொள்வார். காட்சி படமாக்கப்படும்போது கச்சிதமாக நடித்து அசத்துவார்," என்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ்.
சித்தார்த்
, :
தமிழகத்

