பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்' திரைப்படத்தில் விக்ரமிற்கு நாயகியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் மாளவிகா. பின்னர் 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த இவர், அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாறன்' படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தங்கலான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதால் அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார் மாளவிகா.
இந்நிலையில், உடல் எடையைக் குறைத்து, இளைத்த தோற்றத்துடன் கூடிய தமது படங்களை டுவிட்டர் ஊடகம் வழியாக இவர் வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படங்கள் இவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் கொண்ட பலரையும் உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
"தங்கலான் படத்தில் எனக்குச் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்காக ஒல்லியான, இறுக்கமான உடலமைப்பை இயக்குநர் விரும்பினார்.
"அதனால், எனக்குப் பிடித்த பிரியாணியை தியாகம் செய்துவிட்டு, கடினமாகப் பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துள்ளேன். படப்பிடிப்பு முடிவடைந்ததும் மீண்டும் எனக்குப் பிடித்த உணவு வகைகளைத் தொடர்வேன்," என்று மாளவிகா கூறியிருக்கிறார்.
மாளவிகாவின் புகைப்படங்களைப் பார்க்கும் போதே படத்தில் இவரின் பங்களிப்பும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்துவரும் கதாநாயகிகளுக்குச் சவால்விடும் வகையில் அமைந்துள்ள இவரது இந்த அர்ப்பணிப்பு தமிழ்த் திரையுலகில் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் பசுபதி, பார்வதி, பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஒத்திகையின்போது காயமுற்ற விக்ரம்
இதனிடையே, நடிகர் விக்ரமிற்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதால் சிறிது காலம் தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 'தங்கலான்' படப்பிடிப்பு குறித்த பிரத்தியேகக் காணொளி விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது.
அதேபோல், கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திலும் விக்ரமின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒத்திகையின்போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதாகவும் விலா எலும்பு முறிந்துள்ளதால் சிறிது காலம் அவரால் தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்றும் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் இருந்து பொன்னியின் செல்வன் மற்றும் ஆதித்த கரிகாலனுக்குக் கிடைத்த வியக்க வைக்கும் வரவேற்புக்கு விக்ரம் தமது நன்றிகளைப் பகிர்ந்துள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் சூரியநாராயணன் பதிவிட்டுள்ளார்.
இதனால், விக்ரம் இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

