அண்மையில் வெளியான 'பீட்சா 3: த மம்மி' படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பீட்சா' பெரும் வெற்றி பெற்றது. அடுத்து அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'பீட்சா 2: வில்லா' படத்துக்கும் இளையர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இப்போது மூன்றாம் பாகத்தை மோகன் கோவிந்த் இயக்க, சி.வி.குமார் தயாரிக்கிறார். அஸ்வின் நாயகனாகவும் பவித்ரா மாரிமுத்து நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும்,, ரவீனா தாஹா, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"பேய் என்பது உண்மையாகவே இருக்கிறதா, இல்லையா, அது வருவதற்கான அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இந்தப் படத்தில் இடமில்லை. ஆனால் இது நூறு விழுக்காடு திகில் படமாக உருவாகிறது.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தோம். கொரோனா தொற்றுப்பரவல் முடக்கிப் போட்டுவிட்டது.
"உணர்வுபூர்வமான காட்சிகளும் திகிலும் இணையும்போது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்துப்போகும். 'பீட்சா' என்ற தலைப்பே ரசிகர்களை திரையரங்குக்கு அழைத்து வரும். இதை எளிதில் சாதித்துவிடலாம். ஆனால் அந்த தலைப்பு ஏற்படுத்தும் மாயாஜாலத்துக்கு இணையாக நல்ல கதையைச் சொல்ல வேண்டிய பொறுப்பும் சவாலும் எனக்கு உள்ளன.
"விஜய் சேதுபதி அண்ணாவுக்கு முதல் பாகம் வெற்றிப்பாதையை அமைத்துக் கொடுத்தது. இரண்டாம் பாகம் அசோக் செல்வன் இன்ற இளம் நாயகனுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
"இப்போது 'பீட்சா' மூன்றாவது பாகத்தை இயக்கும் அறிமுக இயக்குநரான எனக்கும் பட நாயகன் அஸ்வினுக்கும் இப்படம் கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் மோகன் கோவிந்த்.

