திரையுலகில் சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்யும் புத்திசாலி நாயகிகளில் காஜல் அகர்வாலும் இடம்பெற்றுள்ளார்.
புதிதாக அழகு சாதனப் பொருள்களுடன் தொடர்புடைய தொழிலைத் தொடங்கி உள்ளார். கண் மை தயாரிப்பும் விற்பனையும்தான் இந்தப் புது நிறுவனத்தின் முக்கியமான பணியாம்.
அண்மையில் இந்நிறுவனத்தின் தொடக்க விழாவை சிறப்பாக நடத்தியுள்ள காஜலுக்கு திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது கணவரது உதவி இல்லாமல் இந்தத் தொழிலை தம்மால் தொடங்கி இருக்க முடியாது என்கிறார் காஜல்.
தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை கடந்த 2020ஆம் ஆண்டு காதலித்து மணம் புரிந்தார் காஜல். இத்தம்பதியர்க்கு ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.
"திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் குடும்பப் பொறுப்புகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று என் கணவர் வற்புறுத்தவில்லை. சொந்தத் தொழில் தொடங்க உதவிகரமாக இருந்தார்.
"ஒரு கணவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளார். அந்த வகையில் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி," எனக் கணவருக்கு நன்றி சொல்கிறார் காஜல் அகர்வால்.

