விஜய் நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப் படத்துக்காக விஜய்க்கு இருநூறு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது தமிழ்த் திரையுலகத்தினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கால்ஷீட்டைப் பயன்படுத்தி விஜய்யை இயக்க உள்ளார் வெங்கட் பிரபு.
இதற்காக அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக கதையையும் திரைக்கதையையும் வெங்கட் பிரபு உருவாக்கி உள்ளதாகத் தகவல்.
கதையைக் கேட்ட விஜய்யும் அருமையாக உள்ளது என பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
குறைந்தபட்சம் பத்து மொழிகளில் இந்தப் படம் வெளியீடு காணும் என்றும் இதன் காரணமாக விஜய்க்கு பெரும் ஊதியம் பேசப்பட்டுள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"விஜய்க்கு முதன்முறையாக இருநூறு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. காரணம், இந்தப் படத்தில் அவர் ஏற்க உள்ள கதாபாத்திரத்துக்காக அவர் பெரிதும் மெனக்கெட வேண்டியிருக்கும்.
"வழக்கத்தைவிட அதிக நாள்கள் கால்ஷீட்டும் ஒதுக்கவேண்டும் என இயக்குநர் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
"அதனால்தான் அவருக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இந்தியாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் கதாநாயகன் என்ற பெருமை விஜய்க்கு கிடைக்கும்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

