ஒரு திரைப்படத்தை தரமாக உருவாக்குவது மட்டுமே மனநிறைவு தந்துவிடாது என்றும் அப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் ஆதரவுடன் வர்த்தக ரீதியாகவும் சாதிப்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கி உள்ளது என்றும் நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீரா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது 'குட் நைட்' திரைப்படம்.
கடந்த வாரம் வெளியீடு கண்ட இப்படம் விமர்சன, வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, அப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மணிகண்டன், இப்படத்தின் இயக்குநர் தம்மை நேரில் சந்தித்து சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது எனவும் இயக்குநர் கதை சொன்ன விதமும் தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்றும் குறிப்பிட்டார்.
"இப்படத்தின் தயாரிப்புத்தரப்பிடம் சிலர், 'மணிகண்டனை வைத்து படம் எடுக்கிறீர்களே, இது தேவையா?' என அச்சுறுத்தி இருக்கிறார்கள். அதற்கு, தயாரிப்புத் தரப்பில் இந்த கதை மீதும் மணிகண்டன் மீதும் இந்தப் படக்குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளிக்கப்பட்டது.
"எனக்கும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி அண்ணனாக, வழிகாட்டியாக இருக்கிறாரோ, அதேபோல்தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார். அவரால்தான் இந்த படக்குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள்.
"இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகுதான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக்கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்,'' என்றார் மணிகண்டன்.
அறிமுக இயக்குநராக முதல் படத்துக்குரிய அழுத்தத்தை இயக்குநர் விநாயக் எதிர்கொண்ட விதம் அலாதியானது என்றும் அனைவரையும் அரவணைத்து வழிநடத்தியதற்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்றும் மணிகண்டன் குறிப்பிட்டார். "யார் எத்தகைய கருத்தைச் சொன்னாலும் அதைப் பொறுமையாக கேட்டுக்கொள்வார். படத்தின் வெற்றிக்காகத்தான் அனைவரும் பாடுபடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
"சில சமயங்களில் எனக்கே என் மீது நம்பிக்கை இருக்காது. ஆனால், 'குட் நைட்' படத் தயாரிப்பாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
"இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருமே நட்புடனும் உரிமையுடனும் பேசிப் பழகினர். கடுமையாக உழைத்து வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர். இது மறக்க இயலாத அனுபவம்," என்றார் மணிகண்டன். இதற்காக என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்," என்றார் மணிகண்டன்.
'ஜெய் பீம்' படத்துக்குப் பின்னர் தனக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவருவதாகச் சொல்பவர், சிறந்த நடிப்புக்காகப் பலரால் பாராட்டப்படுகிறார்.

