சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் படைப்பில் மீண்டும் நடிப்பது பெரும் மனநிறைவைத் தருகிறது என்கிறார் இளம் நாயகி ஷ்ருதி ரெட்டி.
'மெரினா புரட்சி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், தற்போது 'விசாரணைக் கைதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நட்ராஜ் எனப்படும் நட்டிதான் நாயகன்.
"கதைப்படி, சமூகத்துக்காகப் போராடும் வழக்கறிஞர் திலகவதி என்ற பாத்திரத்தில் தோன்றுவேன். அரசியல் தலைவர் ஒருவர் திடீரென இறந்து போகிறார். மேலும் சில அரசியல் பிரமுகர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
"இந்தச் சமயத்தில் காவல்துறை அதிகாரியான நட்ராஜ் (நட்டி) எந்தக் குற்றமும் செய்யாத ஓர் அப்பாவியைக் கைது செய்ய, அந்த அப்பாவியைக் காப்பாற்ற களமிறங்குவார் வழக்கறிஞர் திலகவதி.
"என்னுடைய முந்தைய படமான 'மெரினா புரட்சி' ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவானது. அது உணர்வுபூர்வமான படம். நானும் அதில் இடம்பெற்றுள்ளேன் என்பதே மனநிறைவு அளித்தது.
"இப்போது 'விசாரணைக் கைதி' படமும் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை முன்வைத்து உருவாகிறது. இவ்வாறு சமூகப் படைப்புகளில் நடிக்கும் வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் தேடி வருகின்றன.
"இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைத்துவிட வேண்டாம். வணிகப் படங்களில் நடிக்கும் ஆர்வமும் உண்டு.
"அதேசமயம் சமூகச் சிந்தனையுடன் நடப்பு அரசியல் விவகாரங்களையும் மையப்படுத்தி உருவாகும் படங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்," என்று சொல்லும் ஷ்ருதி ரெட்டி, பிரபல இந்திய நடிகர் அனுபம் கெர் நடத்தும் நடிப்புப் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.
மும்பையில் பெற்ற நடிப்புப் பயிற்சிக்குப் பிறகு புதுவையில் உள்ள ஒரு நாடகக்குழுவில் இணைந்துள்ளார். சில நாடகங்களில் நடித்து முடித்த பிறகு திரையுலகில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
"தமிழில் 'ஜெய்ஹிந்த் 2' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 15. அதிக விவரம் தெரியாததால் முழுமையாக ஈடுபாடு காட்டவில்லை.
"இப்போது நான் ஓரளவு பக்குவம் அடைந்திருக்கிறேன். 'அண்ணனுக்கு ஜே' படத்தின் இயக்குநர் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். இது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
"இதுவரை எனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதற்கு நான் அதிகம் மெனக்கெட்டதில்லை. ஆனால் இனி கனமான, அழுத்தமான பாத்திரங்களை ஏற்க விரும்புகிறேன்," என்கிறார் ஷ்ருதி ரெட்டி.
'விசாரணைக் கைதி' படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணாக நடித்திருப்பவர், வட்டார மொழியில் பேச பயிற்சி பெற்றுள்ளார்.
கிராமத்துப் பெண்ணாக எளிமையையும் பணிவையும் வெளிப்படுத்தும் அதேவேளையில் துணிச்சலான இளம்பெண்ணாகவும் வலம் வருவாராம்.
"அநீதியைக் கண்டால் பொங்கி எழும் பெண்ணாக நடித்திருப்பது மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. தூத்துக்குடி கிராம மக்களை அணுகி நிறைய பேசினேன். ஏராளமான தகவல்களையும் திரட்டினேன்.
"வட்டார மொழியில் பேசுவது அவ்வளவு எளிதல்ல. எனினும் என்னால் இயன்ற வேகத்தில் அந்தப் பேச்சு வழக்கை கற்றுக்கொண்டேன்.
"பின்னணிக் குரல் பதிவின்போது எனக்கான வசனங்களை நானே பேச விரும்புகிறேன்," என்கிறார் ஷ்ருதி ரெட்டி.
'விசாரணைக் கைதி' படத்தில் இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி, அவரும் வழக்கறிஞர் வேடத்தை ஏற்றுள்ளதாகத் தகவல்.
"நட்ராஜ் போன்ற அனுபவசாலிகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. இப்படத்தின் தயாரிப்பாளரான பிரபு, பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். மேலும், இயக்குநர் பிரபு சாலமனும் எங்களுடன் இணைந்திருப்பது பெரும் பலம்," என்கிறார் ஷ்ருதி ரெட்டி.
ஷ்ருதி ரெட்டி
, :
தமிழகத்

