குறட்டை விடுவதை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. படத்துக்கு ‘டியர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன் ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தை இயக்கியவர்.
ஜி.வி.பிரகாஷும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கிறார்கள்.
“கொரோனா நெருக்கடி காலத்தில்தான் இந்தக் கதையை எழுதினேன். அதற்குக் காரணம் என் அம்மா. அவரும் தூக்கத்தில் பலமாகக் குறட்டை விடுவார்.
“பொதுவாக குறட்டை என்றாலே ஆண்கள்தான் அவ்வாறு செய்வார்கள் என்று நினைத்துவிடுகிறோம். பெண்களும் குறட்டை விடுவார்கள் என்பது நமக்குத் தோன்றாது.
“அதிலும் அழகான பெண் குறட்டை விடுவார் என்று சொன்னால் அதை பலர் நம்பக்கூட மாட்டார்கள்.
“வீட்டில் மனைவியோ, தோழியோ குறட்டை விட்டால், அதுகுறித்து யாரிடமும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள மாட்டோம். இதையெல்லாம் யோசித்த போதுதான் ‘டியர்’ படத்தின் கதை உருவானது.
“அதற்காகக் குறட்டை விடுதலை மட்டுமே இந்தப் படம் அலசாது. வேறு பல உணர்வுபூர்வமான அம்சங்களையும் விவரித்துள்ளோம்,” என்கிறார் ஆனந்த் ரவிச்சந்திரன்.
ஒரு கணவன், மனைவிக்கு இடையே குறட்டை விடுதல் காரணமாக பிரச்சினை ஏற்படுகிறது. அதன் பின்னர் நிகழும் சில சம்பவங்கள் அந்தப் பிரச்சினையை மேலும் பெரிதாக்குகிறது.
அந்தச் சூழலை நினைக்கும்போது சிரிக்கத் தோன்றும் என்றாலும் அதன் பின்னணியில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் உள்ளன என்கிறார் இயக்குநர்.
“குறட்டையை வைத்து அரசியல்கூட பேசலாம். ‘ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் என்பதுதான் திருமணம்.
“அந்த உறவில் அனைத்தும் நூறு விழுக்காடு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூடாது. இந்த அழகான அறிவுறுத்தலை எனது படம் வழங்கும்,” என்கிறார் ஆனந்த் ரவிச்சந்திரன்.
இப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷின் தந்தையாக ‘தலைவாசல்’ விஜய், தாயாக ரோகிணி நடித்துள்ளனர். ஜிவியின் அண்ணனாக காளி வெங்கட்டும் அவரது மனைவியாக நந்தினியும் நடிக்க, ஐஸ்வர்யாவின் பெற்றோராக இளவரசு, கீதா கைலாசமும் நடித்துள்ளனர்.
“ஜி.வி.பிரகாஷின் உழைப்பு வியக்க வைக்கிறது. ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் இசை என்று அசத்துகிறார். கடினமான காட்சிகளிலும்கூட ஒத்திகை பார்க்காமல் நடிக்கும் திறமை அவரிடம் உள்ளது.
“இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் அவர்தான். படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன. இன்னும் இரண்டு பாடல்களைப் படமாக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு படம் முடிந்துவிடும். இளையர்களைக் கவரும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம்.
“கேரள மாநிலத்தின் இடுக்கி பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை.
“எனினும், அங்கு காட்சிகளைப் படமாக்கினால் மிக அழகாக இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர். ஜி.வி. பிரகாஷ் ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது.
“ஆனால் அவரோ எந்தவித வசதியையும் செய்துதரக் கோராமல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார்.
“அவரது அந்த எளிமையும் தொழில் பக்தியும் பாராட்டுக்குஉரியவை,” என்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்.
நடிகர் கார்த்தி நடித்துவரும் புதிய படம் ‘ஜப்பான்’. அவரது பிறந்தநாளை ஒட்டி, இப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவலைப் படக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையின்போது இப்படம் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது. எனினும், வெளியீட்டுத் தேதி பின்னர் தான் உறுதிசெய்யப்படுமாம்.
முன்னாள் நடிகர் அப்பாஸ் பட வாய்ப்புகள் குறைந்துபோன தால் குடும்பத்துடன் நியூசி லாந்தில் குடியேறிவிட்டார். அங்கு வருமானத்துக்காக இரு சக்கர வாகனங்களில் பழுது நீக்கும் மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1996ஆம் ஆண்டு கதிரின் ‘காதல் தேசம்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான அப்பாஸ் ‘விஐபி’, ‘பூச்சூடவா’, ‘ஜாலி’, ‘ஹேராம்’ உள்ளி்ட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.