அஞ்சலி திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகளாகிவிட்டன. இந்நிலையில் அவர் நடிக்கும் ஐம்பதாவது படம் மலையாளத்தில் உருவாகிறது.
ராம் இயக்கத்தில் 'கற்றது தமிழ்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அஞ்சலி. அதன் பிறகு 'அங்காடித்தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'மங்காத்தா' உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 'கேம் சேஞ்சர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.
"ஐம்பதாவது படத்தில் நடிக்கிறேன் என்பது எனக்கே வியப்பளிக்கிறது. இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
"வித்தியாசமான கதைக்களத்தில் நடிப்பதால் இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன்," என்கிறார் அஞ்சலி.
இப்போதெல்லாம் தனது காதல், திருமணம், எதிர்காலத் திட்டங்கள் குறித்தெல்லாம் அஞ்சலி வெளிப்படையாகப் பேசுவதில்லை.
செய்தியாளர்களோ, ரசிகர்களோ அவை குறித்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை நாசூக்காகத் தவிர்த்துவிடுகிறார்.
தற்போது தனது முழுக் கவனமும் திரையுலகில் மட்டுமே குவிந்திருப்பதாகச் சொல்கிறார் அஞ்சலி.

