திரைப்படத்துறை என்பது சமூகத்தின் மீது பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதை உணர்ந்து தமக்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகச் சொல்கிறார் துஷாரா விஜய்.
'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ள இந்த இளம் நாயகி நடிப்்பில் 'கழுவேத்தி மூர்கன்' படம் வெளியாகி உள்ளது.
"நான் எப்போதுமே தரமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். திரையுலகம் அடித்தட்டு மக்கள் மத்தியிலும்கூட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
"அந்த வகையில் ஒரு படத்தில் நான் வெளிப்படுத்தும் நடிப்பும்கூட சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.
"எனவே நான் நடிக்கும் படம், கதாபாத்திரம் ஆகிய இரண்டுமே மக்களுக்குப் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்கிறார் துஷாரா.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னியாபுரம்தான் இவரது சொந்த ஊராம். அதனால் மண்சார்ந்த படைப்புகள், வேடங்களில் தம்மால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த இயலும் என்கிறார்.
"நான் எத்தகைய சவாலான கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயார். அதேசமயம் பொறுப்புள்ள நடிகை என்று பெயரெடுக்க விரும்புகிறேன்.
"இதற்கு முன்பு மாரியம்மா, ரெனி என நான் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைத்தது. இப்போது 'கழுவேத்தி மூர்கன்' படத்தில் கவிதாவாக நடித்துள்ளேன்.
முந்தைய படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் தாக்கம் புது வேடத்தில் இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினேன். உண்மையில் இதுபோன்ற விஷயங்கள்தான் ஒரு நடிகைக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
"ரசிகர்கள் 'இது நம்ம ஊர் பொண்ணு' என்று என்னை அடையாளம் காண வேண்டும். அதையே எனக்கான பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.
"எனது கிராமத்தில் நான் சந்திக்கும் பெண்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். அவர்கள் பேசும் விதம், வேலைகளைச் செய்யும் விதம் என்று அனைத்தையும் கவனிப்பேன்.
"கவிதாவாக என்னைத் திரையில் பார்க்கும்போது பல பெண்களால் தங்களை என்னுடன் எளிதில் பொருத்திப் பார்க்க இயலும். அதுமட்டுமல்ல, எனது நடிப்பு அவர்கள் முகத்தில் மெல்லிய புன்னகையைக் கொண்டு வரும்," என்கிறார் துஷாரா விஜயன்.
விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள போதிலும், ரசிகர்களின் வரவேற்பும் தன்னிடம் காட்டும் பாசமும் வியக்கவும் நெகிழவும் வைப்பதாகச் சொல்பவர், நடிக்க வந்த புதிதில் பெரும் சமுத்திரத்தில் உள்ள சிறிய மீனைப்போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
"தொடக்கத்தில் பல குழப்பங்கள் இருந்தன. எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல் விழித்தேன். ஆனால் இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது.
"எனக்கு முன்னாள் ஒரு விளக்கின் வெளிச்சம் இருப்பதாகவும் அது என்னை வழிநடத்துவதாகவும் தோன்றுகிறது. எனினும் எனது கடந்த காலத்தை மறக்கவே மாட்டேன்.
"நான் இன்னும்கூட மற்றவர்களைப் போன்ற சாதாரண பெண்தான். நடிகையாகிவிட்டதால் எனக்கென தனி இடம் கிடைத்துவிட்டதாக நினைக்கவில்லை," என்று சொல்லும் துஷாரா, மிகப்பெரிய படைப்புகளில் இடம்பெறுவதை விரும்புகிறார்.
எனினும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பாராம்.
ஒற்றைக் காட்சியில் வந்தாலும்கூட ரசிகர்கள் தன்னை நினைவில் வைத்திருக்கும் வகையில் அந்தக் காட்சி சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றும் இதில் சமரசத்துக்கு இடமில்லை என்றும் சொல்கிறார் துஷாரா.
துஷாரா விஜயன்
, :
தமிழகத்

