தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்பொழுது கமல் தயாரிக்கும் ‘எஸ்.டி.ஆர்.48’ என்ற படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் வேடத்துடன் லண்டனை வலம் வரும் காட்சிகள் இணையத்தில் பரவிவருகின்றன. இந்தப் படத்தில் நடிக்க அவர் சம்பளத்தை 20 கோடி ரூபாய்க்கு உயர்த்தி இருந்தார். படம் வெற்றி பெற்றால் சம்பளம் மேலும் உயரும் என்றும் அறிவித்து இருக்கிறார்.
தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் தனுஷ் தனியாக அதிகாலையில் சாலையில் ‘ஜாகிங்’ செய்துகொண்டு வழியில் செல்பவர்களுக்கு கையசைத்துக்கொண்டு ஓடும் காட்சி காணொளியாக வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு இவர் நடிக்க இருக்கும் இவரது 50வது படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க, தனுஷ் இயக்க இருக்கிறார். தனுஷுடன் திரிஷா ‘கொடி’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரூ.5 கோடி செலவில் உருவான இந்தத் திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர்களின் வரிசையில் பிரதீப்பும் இருந்துள்ளார். ஆனால், தொடர்ந்து நாயகனாக நடிக்கும் ஆசை காரணமாக பிரதீப் அந்த வாய்ப்பை மறுத்ததால்தான் அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. பிரதீப் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ எனும் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொடர்ந்து சில மலையாளப் படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அண்மையில் கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தை தமிழகத்தில் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் வெளியீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்நிலையில்
ரூ.33 கோடி கடன் பிரச்சினையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் வெளியாகும் நாளன்று அந்தப் பணத்தை செலுத்தினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கடன் கொடுத்தவர்கள் கூறி இருக்கின்றனர். இதற்கிடையில் லைகா நிறுவனம் வருமான வரி பிரச்சினையில் மாட்டி இருப்பதால் சிவகார்த்திகேயனுக்கு உதவ முடியாது என்றும் அவருடைய கடன் பிரச்சினையை முதலில் முடித்துவிட்டு வந்தால் படத்தை வெளியிடலாம் என்று கூறிவிட்டதாம். அதனால் சிவகார்த்திகேயனும் அவருடைய ரசிகர்களும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கவலையில் இருக்கின்றனர்.