எப்போதும் உண்மையைப் பேச வேண்டும் என்பதே தமது கொள்கை என்கிறார் நடிகர் சித்தார்த்.
எனினும் அண்மைக்காலமாக சமூக பிரச்சினைகள் குறித்து தாம் அதிகம் வாய் திறப்பது இல்லை என்கிறார்.
"முன்பெல்லாம் சமூக விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக எனது கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டேன். அப்போது எனக்குப் பெரிதாக ஆதரவு இல்லை. நான் மட்டும் தனியாக பேசிக் கொண்டிருந்தேன்.
"யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாக அனைத்தையும் சமாளிப்பதற்கு நான் ஒன்றும் 'சூப்பர் நாயகன்' கிடையாது. தனியாக நான் மட்டும் இதில் பாதிக்கப்பட விரும்பவில்லை," என்கிறார் சித்தார்த்.
மேலும், தாம் சொல்லும் கருத்துகள் தன்னை வைத்து படம் எடுப்பவர்களின் நலனையும் பாதித்தது என்று குறிப்பிடுபவர், சமூக ஊடகங்களை விட்டு விலகி, தற்போது தன் பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார்.
தமிழில் கடைசியாக 'டக்கர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அண்மையில் சமூக ஊடகம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர், முன்பு போல் சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் ஏன் பதிவிடுவதில்லை எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விரிவாகப் பதிலளித்துள்ளார் சித்தார்த்.

