அறிமுகமான வேகத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார் சித்தி இட்னானி.
'வெந்து தணிந்தது காடு', 'தி கேரளா ஸ்டோரி', 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தன் நடிப்பை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கு தாம் பொருத்தமாக இருப்பதாக கருதி வாய்ப்பளித்த இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிடும் சித்தி இட்னானி, திரையில் பேருக்கு வந்து போகும் கதாபாத்திரங்களை ஏற்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்கிறார்.
"வணிகப் படங்களில் சில ஆடல், பாடல் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்து போவதற்கு நான் தேவையில்லை. அதற்கு முன்வரும் நாயகிகளை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
"என்னால் சிறப்பாக நடிக்க முடியும் எனக் கருதும் கதாபாத்திரங்களிலும் சவாலான வேடங்களிலும் நடிப்பதையே விரும்புகிறேன்," என்கிறார் சித்தி இட்னானி.
தற்போது தனது திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடுபவர், அண்மைக்காலங்களில் அனைத்து மொழிகளிலும் கதாநாயகிகளைப் பயன்படுத்தும் விதம் மாறி வருவதாகச் சொல்கிறார்.
"கதாநாயகிகளுக்கு ஓரளவு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. எனவே, தங்களுக்கான கதாபாத்திரங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது குறித்து கதாநாயகிகளும் கருத்து தெரிவிக்க முடிகிறது. அவற்றை சில இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வதும் நல்ல மாற்றம் என்பேன்," என்கிறார் சித்தி இட்னானி.
இவர் மும்பையில் பிறந்து வளர்ந்த மராத்தி பெண் ஆவார். தமிழ் தெரியாத போதிலும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இவரை ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கௌதம் மேனன்.
எனினும், கடும் பயிற்சி மேற்கொண்டு அறிமுகப் படத்திலேயே சொந்தக் குரலில் வசனங்கள் பேசி நடித்துள்ளார்.
"இன்னமும் கூட தமிழில் தெளிவாகப் பேச பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது கதாபாத்திரத்துக்கு நானே பின்னணி பேசினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கௌதம் மேனன் கூறினார்.
"எனக்கும் அதுதான் சரி எனத் தோன்றியது. எனினும், 'காதர் பாட்ஷா' படத்தில் வட்டார மொழியில் பேச வேண்டியிருந்தது.
"அந்த அளவுக்கு தமிழ் தெரியாது என்பதால் எனக்காக வேறொருவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் திணறாமல் தமிழ் பேசுவேன் என நம்புகிறேன்," என்கிறார் சித்தி இட்னானி.
அண்மைய படத்தில் எனது கதாபாத்திரத்துக்காக பாவாடை தாவணி அணிந்து நடித்தது மிகுந்த மனநிறைவை அளித்துள்ளதாக குறிப்பிடுபவர், மண் வாசனையுடன் கூடிய கதாபாத்திரங்களில் ரசித்து, அனுபவித்து நடிக்க முடியும் என்கிறார்.
'தி கேரளா ஸ்டோரி' படம் சர்ச்சைக்குள்ளாகும் என்று தெரிந்துதான் அதில் நடித்தாராம்.
"அந்தக் கதையை கேட்டபோதே, வழக்கமாக சினிமா ரசிகர்கள் ரசித்து, விரும்பிப் பார்க்கும்படியான வணிகப் படம் அல்ல என்பது புரிந்தது. நிச்சயமாக எதிர்வினைகள் இருக்கும் என்பதையும் உணர்ந்தேன்.
"என்னைப் போலவே அந்தப் படத்தில் நடித்த மற்றவர்களுக்கும் இத்தகைய புரிதல் இருந்தது என்றே நினைக்கிறேன்.
"அனைத்தையும் கடந்து அப்படத்தின் மையக்கருத்து என்பது சரியான பார்வையாளர்களைச் சென்றடைந்தால், அது சிலருக்கு உதவினால், அதில் நாங்கள் உழைத்ததற்கான பலன் கிடைக்கும் என நம்பினேன்.
"இந்த அடிப்படையில் எனக்கான கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து முடித்தேன். இதனால் சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் நான் விரும்பியபடி சவாலான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
"தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் நிறைந்துள்ளது," என்று சித்தி இட்னானி உறுதியாகச் சொல்கிறார்.
, :
தமிழகத்

