கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டுப்போட்டிகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம்.
அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி என படத்தில் மூன்று கதாநாயகர்்கள் உள்ளனர். அறிமுக இயக்குநர் ச.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ளது இப்படம். இவர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
"என் படத்தின் கதாநாயகர்கள் மூவருமே நிஜத்திலும் அருமையான கிரிக்கெட் வீரர்கள். அதனால் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக நடித்துள்ளனர்.
"எனினும் படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்னர் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு மூவரும் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டனர். குறுகிய கால ஒத்திகையும் தேவைப்பட்டது.
"அசோக் செல்வன் அருமையான சுழற்பந்து வீச்சாளர். ஆனால் 'விக்கெட் கீப்பிங்' தெரியாது என்றார். அதனால் அவருக்குப் பயிற்சி தேவைப்பட்டது.
"அதேபோல் பிருத்விராஜுக்கு மட்டையடியில் பல நுணுக்கங்கள் தெரியும் என்றாலும் பந்துவீச்சில் அவருக்கு ஆர்வமில்லை. அதனால் அவருக்கு பந்து வீச்சில் பயிற்சி தேவைப்பட்டது.
"சாந்தனுக்கு கிரிக்கெட்டில் அனைத்தும் அத்துப்படி என்றாலும் அவரும் பயிற்சி மேற்கொண்டார்," என்று தனது கதாநாயகர்களைப் பாராட்டுகிறார் இயக்குநர் ஜெயக்குமார்.
பயிற்சியின்போது பிருத்விராஜுக்கு விரலில் அடிபட்டதாம். இருப்பினும் ஒருநாள்கூட பயிற்சிக்கு வராமல் இருந்ததில்லையாம்.
அரக்கோணம்தான் கதைக்களம். காரணம், அந்தப் பகுதி மக்கள் விளையாட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவம்.
"அரக்கோணம் பக்கம் பெருமுச்சி என்ற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அரக்கோணத்தைப் பொறுத்தவரை விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
"கைப்பந்து, கூடைப்பந்து, காற்பந்து, கிரிக்கெட் என அனைத்து விளையாட்டுகளிலும் ஏராளமான, தரமான வீரர்கள் உருவாகும் ஊர் அது. விளையாட்டுகளில் சாதித்ததால் வேலைவாய்ப்புகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருக்கும்.
"ஒவ்வொரு வீதியிலும் கிரிக்கெட், காற்பந்து என பல்வேறு அணிகள் இருக்கும். ஆண்டு முழுவதும் ஏதாவது போட்டிகள் நடந்த வண்ணம் இருப்பதால், எனது கதைக்கு அரக்கோணம் பொருத்தமான கதைக்களமாக இருந்தது," என்கிறார் ஜெயக்குமார்.
படப்பிடிப்பின்போது அசோக் செல்வன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோதும் ஓய்வின்றி நடித்துள்ளார். கதைப்படி அவரது கதாபாத்திரத்தின் பெயர் ரஞ்சித். ஒரே கிராமத்தைச் சேர்ந்த அவரும் சாந்தனுவும் தனித்தனி கிரிக்கெட் அணியை வழிநடத்துவார்கள். அப்போது இருவருமே ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
"மூன்று கதாநாயகர்களுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். நான் புதுமுகம். எனினும் எனக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது.
"கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சில புதுமுகங்களையும் திரையில் பார்க்கலாம்.
"இது கிராமத்து கிரிக்கெட்டை விவரிக்கும் படம். இளையர்களை வெகுவாகக் கவரும். அதற்கேற்ப காட்சி களை அமைத்துள்ளோம். படத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என இப்போதே உத்தரவாதம் அளிக்கிறேன்," என்கிறார் இயக்குநர் ஜெயக்குமார்.
அசோக்
செல்வன்
, :
தமிழகத்

