திரையுலகில் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சக கலைஞர்களை வடிவேலு அறவே கண்டுகொள்வதில்லை என நடிகர் பாவா லட்சுமணன் சாடி உள்ளார். ஏற்கெனவே சில நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுவை இதே காரணத்துக்காக வசைபாடி உள்ளனர். இப்போது பாவா லட்சுமணனும் அப்பட்டியலில் இணைந்துள்ளார்.
துணை நடிகர் 'சிஸர்' மனோகரன் அண்மைய பேட்டியில், வடிவேலுவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது கோபமாக வருகிறது என்றும் அவரை சரமாரியாக கன்னத்தில் அறைய வேண்டும் எனத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் கொட்டாச்சி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் வடிவேலு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் பாவா லட்சுமணனும் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
"கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. அப்போது நான் இறந்துவிட்டதாகக்கூட செய்தி பரவியது.
"அவ்வளவு ஏன், எனக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியும்கூட ஒட்டிவிட்டார்கள். அதைக் கேள்விப்பட்டு சந்தானம் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். எனது சிரம நிலையை உணர்ந்து ஆறுதல் கூறினார்.
"ஆனால் வடிவேலு அதைக்கூட செய்யவில்லை. தொலைபேசியிலாவது தொடர்புகொள்வார் என எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை.
"அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த 'அல்வா' வாசு, உடல்நலம் சரியில்லாமல் மதுரையில்தான் இறந்துபோனார். ஆனால் மதுரையில் இருந்த வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை," என்கிறார் பாவா லட்சுமணன்.

