சுபோலி விளம்பரத்துக்கு தாம் ஆசைப்படுவதில்லை என்கிறார் இளம் நாயகி காவ்யா தாப்பார்.
விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தின் கதாநாயகி. மேலும் இரண்டு தெலுங்குப் படங்கள், ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வரும் நாயகி.
"எல்லாருக்கும் ஒரு தாய்மொழிதான் இருக்கும் என்றால் எனக்குப் பஞ்சாபி, இந்தி ஆகிய இரண்டுமே தாய்மொழிகள்தான். சிறு வயது முதலே இவ்விரண்டு மொழிகளும் பேசக்கூடியவர்களுடன் பேசிப்பழகினேன். அதனால் இந்திப் படங்களில் நடிக்கும்போது எனக்கு எந்தவிதச் சிரமமும் ஏற்படாது.
"தெலுங்குத் திரையுலகில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன. தொடர்ந்து நடிப்பதால் தெலுங்கும் ஓரளவுப் பழகிவிட்டது. தெலுங்கு ரசிகர்கள் எனது நடிப்பை பாராட்டுகிறார்கள்.
"தமிழில் இப்போதுதான் வாய்ப்புகள் தேடி வருகின்றன. இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அதனால் வசனங்களைப் பேசுவதில் சற்றே தடுமாற நேரிடுகிறது. கூடிய விரைவில் தமிழில் சரளமாகப் பேசக்கற்றுக்கொள்வேன். அதற்கான பயிற்சிக்காக தினமும் கணிசமான நேரம் ஒதுக்குகிறேன்," என்கிறார் காவ்யா தாப்பார்.
கதைகளைத் தேர்வு செய்வதில் அவசரம் காட்டுவதில்லை என்றும் தமக்கு ஒத்துவரக்கூடிய கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்வதாகவும் சொல்கிறார்.
"ஆயிரம் கதைகள் தேடிவந்தாலும் அவற்றுள் மனதுக்குப் பிடித்தமான கதைகள் குறைவாகத்தான் இருக்கும். கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும், அவற்றை ஏற்கும்போது நூறு விழுக்காடு அர்ப்பணிப்புடன் உழைக்க முடியுமா என யோசிக்க வேண்டும்.
"எனக்கான கதாபாத்திரத்தை மெருகேற்றுவதில் இயக்குநர் உதவி செய்வார் என்றாலும் எனது தரப்பிலும் உண்மையான உழைப்பு இருக்க வேண்டும். எனது அர்ப்பணிப்பு இல்லாமல் அந்தக் கதாபாத்திரம் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற வாய்ப்பு இல்லை.
"இதுதான் எல்லை என்ற வரையறை ஏதும் வகுக்காமல் நல்ல வேடங்களை ஏற்கிறேன். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநர் எதிர்பார்க்கும் நடிப்பை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன்," என்கிறார் காவ்யா தாப்பார்.
வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து இளம் நாயகிகளுக்கும் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்பவர், அதுபோன்ற வாய்ப்புகளுக்காகப் பொறுமையுடன் காத்திருக்கப் போவதாகச் சொல்கிறார்.
'ஏக் மினி கதா' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் காவ்யாவின் கவர்ச்சித் தோற்றம் இளையர்களின் தூக்கத்தை இன்றுவரை கெடுத்து வருகிறது. தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகள் தேடிவந்தாலும் அவற்றை ஏற்கவில்லை என்கிறார்.
"அந்தப் பாடலை மட்டும் பார்த்துவிட்டு என்னைக் 'கவர்ச்சிப் பதுமை' என்று வர்ணிக்கிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை.
"சமூக ஊடகங்களில் அந்தப் பாடலை ஏராளமானோர் பார்த்து ரசித்துப் பகிர்ந்து வருவதாகக் கேள்விப்படும்போது எனக்கே வியப்பாக உள்ளது. கதைக்குத் தேவையான சூழல் அமைந்ததால் அந்தப் பாடலுக்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது.
"தேவையற்ற கவர்ச்சியை நான் விரும்பவில்லை. அதேசமயம் இளம் நடிகை என்ற வகையில் சமூக ஊடகங்களில், பொதுவெளியில் என்னைப் பற்றி எல்லாரும் அதிகம் பேச வேண்டும் என விரும்புகிறேன். ரசிகர்களின் பார்வை என் மீதும் படவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை என நம்புகிறேன்.
"அதற்காக எனது தரப்பில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்வேன். ரசிகர்கள் என்னை எப்போதும் நினைவில் வைத்திருக்க எனது நடிப்புதான் முதல் நிலையில் கைகொடுக்கும் என்று அனுபவசாலிகள் கூறியுள்ள ஆலோசனைகளை நிச்சயம் மறக்க மாட்டேன்," என்கிறார் காவ்யா தாப்பார்.
சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்க விரும்பினாலும் இவருக்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லையாம்.
நேரம் வாய்க்கும்போது நேரடி உரையாடல்களுக்குத் தயார் என்று சொல்பவர், திரையுலகில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் ஆன போதிலும் இதுவரை எட்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதற்கு முன்பு இந்திக் குறும்படத்திலும் நடித்துள்ளேன்," என்கிறார் காவ்யா.
, :
தமிழகத்

