எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள 'பொம்மை' படம் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. இதற்குப் போட்டியாக குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. குறைந்த பொருள்செலவில் உருவாகி உள்ள 'எறும்பு, 'தொலைவில்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அன்றைய தினம் வெளியாக உள்ளன.
தமிழில் உருவாகும் 'காடப்புறா கலைக்குழு' என்ற படத்தின் மூலம் கதை நாயகனாகி உள்ளார் முனீஸ்காந்த். இப்படத்தின்் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடிக்கிறார். ராஜா குருசாமி என்ற புதுமுகம் இயக்கும் இப்படத்துக்கு ஹென்ரி இசை அமைக்கிறார். இது கரகாட்டத்தில் ஆடும் ஆண் நடனக் கலைஞர்களைப் பற்றிய நகைச்சுவைப் படமாக உருவாகிறது. கரகாட்ட கலைஞராக முனீஷ்காந்தும் நாதஸ்வர கலைஞராக காளி வெங்கட்டும் நடிக்கிறார்கள்.
என்னுடைய அத்தியாயமே முடிந்துவிட்டது எனப் பலர் மகிழ்ச்சி அடைந்ததாக நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அண்மைய பேட்டியில், "எத்தனையோ பேரை நான் சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் எனக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதும் பலர் மகிழ்ச்சி அடைந்தனர். என் மனைவி, பிள்ளைகள், நண்பர்களின் உதவியோடு மீண்டு வந்துள்ளேன்," என ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

