நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாடல்கள் எழுதுவது கதாநாயகர்களுக்குத் தேவை இல்லாத வேலை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இப்போதெல்லாம் தமிழ்த் திரையுலகில் யார், எப்போது, என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்வார்கள் என யூகிக்க முடியவில்லை.
நடிகர்கள் இயக்குநர்களாகவும் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாகவும் மாறுகின்றனர். சொந்தப் படம் தயாரிக்கும் திரைக்கலைஞர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
அந்த வகையில் முன்னணி கதாநாயகர்களாக உள்ள தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் பாடலாசிரியர்களாகவும் செயல்படுகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் பாடலாசிரியர்கள் மத்தியில் மறைமுக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருவரும் தங்களுடைய பணியில் குறுக்கிடுவதாகவும் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படுவதாகவும் பாடலாசிரியர்கள் சிலர் புலம்புவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற மதிப்புடன் வலம் வந்த தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் படத்துக்கு நடித்துக்கொண்டே பாடல்களை எழுதி, அவற்றைப் பாடவும் செய்தனர்.
"அவர்களது பாடல்களில் அர்த்தமும் அழகியலும் இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. நல்ல மெட்டுக்கும் தமிழுக்காகவும் இல்லாமல் வெறும் சத்தத்துக்காக பாடல்கள் எழுதப்படுகின்றன. இது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை," எனத் தமிழக ஊடகத்தில் வெளிவந்துள்ள ஓர் அலசல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்கள் தங்களுடைய நடிப்பை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தலாம் என்றும் பாடல்கள் எழுதுவது தேவையற்ற வேலை என்றும் சொல்கிறார் கோடம்பாக்கத்தின் மூத்த செய்தியாளரான ஆர்.எஸ்.அந்தணன்.
"ஒரு காலத்தில் கவிஞர் வைரமுத்து தனது பாடல்களில் ஆம்பல், மௌவல் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உடனே ரசிகர்கள் அவற்றுக்கு என்ன அர்த்தம் என்ற விளக்கத்தை தேடினார்கள். ஆனால் கதாநாயகர்களும் மற்றவர்களும் பாடல் என்ற பெயரில் எழுதும் வரிகளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் பாடல்களின் தரம் குறைந்துகொண்டே போகிறது," என்று கவலையை வெளிப்படுத்தி உள்ளார் திரு அந்தணன்.
கமல்ஹாசன், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் தங்களுடைய படங்களில் பாடவும் செய்கின்றனர். சூர்யாவும் இவ்வாறு முயற்சி செய்தார். பிறகு ஒத்துவராது எனப் பாடுவதை நிறுத்திவிட்டார்.
திரையில் பாட விரும்பும் நடிகர்கள் நாள்களின் போக்கில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், பாடல்களை எழுத விரும்பும் கலைஞர்கள், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள்.
தனுஷ் தாம் நடித்த '3' படத்துக்காக எழுதிப்பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகெங்கிலும் பலத்த வரவேற்பைப் பெற்றது. எனினும் அப்பாடலில் இடம்பெற்ற வரிகளுக்காக அவர் அதிகம் மெனக்கெடவில்லை. அதன் பிறகும் அதேபோன்ற பாடல்களைத்தான் எழுதி வருகிறார் தனுஷ்.
அவர் போட்ட பாதையில்தான் இப்போது சிவகார்த்திகேயனும் நடைபோடுகிறார். தனுஷ் எழுதிய பாடல்களில் ஒன்றிரண்டாவது தரமாக இருந்தன. ஆனால் சிவகார்த்திகேயன் பயன்படுத்தும் சில வார்த்தைகளுக்கான அர்த்தம் அவருக்கே தெரியாது என்பதுதான் உண்மை.
அண்மையில், 'பீஸ்ட்' படத்தில் அவர் எழுதிய பாடலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இப்போது 'ஜெயிலர்' படத்திலும் பாடல் எழுதியுள்ளார் சிவா.
எனினும் இதன் மூலம் நல்ல விஷயம் நடக்கிறது. அதாவது, பாடல்கள் எழுதிச் சம்பாதிக்கும் தொகையை அவர் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன், மகள் மகாலட்சுமி ஆகியோரின் பெயரில் வங்கியில் வைப்புத்தொகையாகச் செலுத்தி வருகிறார்.
இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்றாலும் கதாநாயகர்கள் பாடல் எழுதுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று பாடலாசிரியர்கள் தரப்பில் முணுமுணுப்பு நிலவுகிறது.
ஆர்.எஸ்.அந்தணனும் இதைச் சுட்டிக்காட்டுகிறார்.
"முழு நேரப் பாடலாசிரியர் ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'சார் எங்களுக்கு பாட்டு எழுதுவதுதான் தொழில். இசையமைக்கவோ, நடிக்கவோ போக முடியாது. ஆனால் இசையமைப்பாளர்களும் நடிகர்களும் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவா தொழில்?
"இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை' என்று புலம்பினார். அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது," என்கிறார் மூத்த செய்தியாளர் திரு ஆர்.எஸ்.அந்தணன்.

