♦ நடிகர் விஜய் தமிழகத்தில் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழும் வழங்கியுள்ள நிலையில் சூர்யாவும் மாணவர்களைச் சந்தித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தமது அகரம் அமைப்பின் மூலம் மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு அகரம் அமைப்பு உதவுகிறது. இந்நிலையில், ஏழை மாணவர்கள் சிலரை நேரில் வரவழைத்து சந்தித்த சூர்யா, அவர்களுக்கு வழக்கம்போல் பண உதவி வழங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றதை ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பாராட்டி உள்ளனர்.
♦ நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் அவரிடம் ரூ.80 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவரைப் பணியில் இருந்து ராஷ்மிகா நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் பண மோசடி குறித்து ராஷ்மிகா இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதற்கிடையே, இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.
♦ இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் வெளியிட இயக்குநர் சங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டால், மற்ற படங்களின் வெளியீடு தள்ளிப்போகும் என்பதுடன் தேவையற்ற போட்டியும் தவிர்க்கப்படும் என அவர் நம்புகிறாராம்.
♦ கிழக்கே போகும் ரயில் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள நடிகர் சுதாகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மீண்டும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அவரது குடும்பத்தார் இத்தகவலை உறுதி செய்யவில்லை.
♦ மாமன்னன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை இதுவரை பத்து மில்லியன் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் 29ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது. இந்நிலையில் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் வடிவேலு நடிப்பு அசர வைப்பதாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.


