தம்முடைய மேலாளர் பண மோசடி செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர், தற்போது இந்தித் திரையுலகிலும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
இந்தியில் ‘அனிமல்’ என்ற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருபவர், தமிழில் ‘ரெயின்போ’ என்ற படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் ‘புஷ்பா 2’ படமும் கைவசம் உள்ளது.
இந்நிலையில், ராஷ்மிகாவிடம் மேலாளராகப் பணியாற்றியவர், அவரிடம் பல லட்சங்களைப் பெற்று ஏமாற்றி விட்டதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக ராஷ்மிகா சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ராஷ்மிகா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தமக்கும் மேலாளருக்கும் இடையே மோதல் என்று வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
“நானும் எனது மேலாளரும் சுமுகமாகவே பேசிப் பிரிந்தோம். மோதல் எதுவும் இல்லை. இனிமேல் நாங்கள் இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம்,” என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.


