கங்கனா ரணவத் இயக்கி, நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது முடிவை மாற்றிக்கொள்ள இந்திரா காந்தி மறுத்து விட்டார்.
அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘எமர்ஜென்சி’ திரைப்படம்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.
‘எமர்ஜென்சி’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கும் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். இதற்காக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.


