நடிகை ரஜிஷா விஜயன் நல்ல கதைக் களம், கதாபாத்திரங்கள் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்திலும் சமூக ஆர்வலர் கதாபாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்தார்.
இந்நிலையில், படங்களைத் தேர்வு செய்வதில் அவர் நடிகை வரலட்சுமியைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. வரலட்சுமியைப் பொறுத்தவரை தென்னிந்திய மொழிகளில் பல வாய்ப்புகள் தேடி வந்தாலும், தனக்கான கதாபாத்திரம் கனமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார்.
இந்நிலையில், வரலட்சுமி நடித்த பிறமொழிப் படங்கள் மலையாளத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டால், அவற்றில் தயக்கமின்றி நடிக்கிறார் ரஜிஷா. காரணம், வரலட்சுமி நடித்திருந்தால் அது தரமான படைப்பாக இருக்கும் என நம்புகிறார்.
இந்நிலையில், ‘பகலும் பாதிராவும்’ என்ற படத்தில் நாயகனையே பணத்திற்காக கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜிஷா. இது தமிழில் ‘கொன்றால் பாவம்’ என்ற படத்தில் வரலட்சுமி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம்.
“நான்கைந்து கதாநாயகிகளை அணுகியபோது நடிக்க மறுத்த பாத்திரத்தில் ரஜிஷா நடிக்க முன்வந்தார். மேலும், ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்ற அவர் வெகுவாக மெனக்கெட்டார்,” என்று பாராட்டுகிறார் அப்படத்தின் இயக்குநர் அஜய் வாசுதேவ்.
அண்மையில் வெளியீடு கண்ட ‘கொள்ள’ (கொள்ளை) மலையாளப் படத்தில் தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜிஷா.