முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கத் தயாராக இருந்தாலும் யாரும் தனக்கு வாய்ப்பு தருவதில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் முடங்கிக்கிடக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் எந்தக் கட்டத்திலும் நம்பிக்கை இழக்கவில்லை. அதனால்தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதுவரை நாயகியை முன்னிலைப்படுத்தும் பதினைந்து படங்களில் நடித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், முன்னணி கதாநாயகர்கள் ஏன் தனக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை என ஆதங்கப்படுகிறார்.
“இதை நினைத்து நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், எனக்கென ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. அதுவே எனக்குப் போதுமானது,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

