தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதனைப் படத்தில் டாலி ஐஸ்

3 mins read
0f88cf52-54f8-4dca-b629-e6a3bb049ee7
டாலி ஐஸ்வர்யா - படம்: ஊடகம்
டாலி ஐஸ்வர்யா
டாலி ஐஸ்வர்யா - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாக்களுக்கு பஞ்சமே இல்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லட்சுமி மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா நாயர், ஐஸ்வர்யா தத்தா இப்படிப் பல ஐஸ்வர்யாக்கள் நடிகைகளாக உள்ளனர். கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்குநராக உள்ளார்.

இவர்களின் வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளார் டாலி ஐஸ்வர்யா.

மாடலிங் துறையில் எட்டு ஆண்டு கால அனுபவம் கொண்ட இவர், ‘கலைஞர் நகர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி உள்ளார். அத்துடன், ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘கலைஞர் நகர்’ 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சாதனைப் படம். சுகன் குமார் இயக்கி உள்ளார், நரேஷ் இசை அமைத்துள்ளார், இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து டாலி ஐஸ்வர்யா திரைச் செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நடிப்பின் மீது இளம் பருவம் முதலே தீராத காதல் இருந்து வந்தாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவதுதான் சரியாக இருக்கும் என முடிவெடுத்தேன்.

“ஏற்கெனவே ‘காதலே கோமாளி’ என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். ‘கலைஞர் நகர்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் அப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது.

“உடனடியாக படப்பிடிப்பு தொடங்கியது. அதுவும் 23 மணி நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனைப் படத்தில் நடித்துமுடிக்கவேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது.

“அதேசமயம் முதல் நாளே படத்தின் காட்சிகள் குறித்த ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது.

தொடர்புடைய செய்திகள்

“படப்பிடிப்புத் தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 இடங்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது.

“ஒவ்வொரு இடத்துக்கும் மாறுவதற்கு எனக்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது.

“இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களது பிரச்சினைகளைச் சொல்லும் கதையாக உருவாகி உள்ளது. அவர்கள்மீது பலரும் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாகவும் இந்தப் படம் அமையும்.

“ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் இந்தப் படத்தில் இடம்பெறும் திருவிழாக் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்.

“யுனிவர்சல் ஜீனியஸ்’ என்கிற சாதனைக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனைப் படத்தின் மூலம் அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி எனது அறிமுகம் அமைந்ததில் மகிழ்ச்சி,” என்கிறார் டாலி ஐஸ்வர்யா.

தற்போது ‘இரவின் கண்கள்’ என்கிற சயின்டிஃபிக் திரில்லர் படத்திலும் ‘ஹேப்பி பர்த்டே ஜூலி’ என்கிற திரில்லர், ‘கடைசி தோட்டா’ என்கிற கிரைம் திரில்லர் படங்களிலும் நடித்து வருவதாகக் கூறும் அவர், இப்படி ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதையம்சத்துடன் உருவாகி வருகின்றன என்கிறார்.

“மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்கள், நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், காதல், அதிரடி சண்டைக் காட்சிகள், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன்.

“படத்தின் இயக்குநர் சுகன் குமார் ஏற்கெனவே ‘பிதா’ என்ற குறும்படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கி சாதனை செய்தவர். இம்முறை முழு நீள திரைப்படத்தை 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே முடித்து விட்டார் இயக்குநர் என்கிறார்.

“சினிமாவில் ஏற்கெனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருந்தாலும் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்ற பெயரில் தான் என்னைப் பலருக்கும் தெரியும். அதனால் சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்துகிறேன்,” என்கிறார் டாலி ஐஸ்வர்யா.

குறிப்புச் சொற்கள்