தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு நான்கே நாளில் படப்பிடிப்புக்கு கிளம்பி வந்துவிட்டார்.
தொழிலதிபரான சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாகப் பேசப்பட்டாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஹன்சிகா.
இதுகுறித்து பேசியுள்ள ஹன்சிகா, “10 வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். சினிமாதான் எனது முதல் கணவர். ‘டேக் ரெடி’ என்ற வார்த்தை எனது ரத்தத்துடன் ஊறிவிட்டது. அதைக் கேட்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,” எனத் தெரிவித்துள்ளார்.
எனது கணவர் எப்படி இருக்கவேண்டும் என நினைத்திருந்தேனோ அதேபோல் சோஹைல் இருக்கிறார்.
அவரது அமைதியும் புரிந்துகொள்ளும் தன்மையும் தனக்கு மிகவும் பிடித்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் எங்களது காதல் வாழ்க்கை சிறப்பாகச் சென்று கொண்டுள்ளது என சிலாகிக்கிறார் ஹன்சிகா.
தற்போது தன் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்துள்ள ஹன்சிகா, தமிழ் சினிமாவுக்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழ் சரியாக பேசுவதில்லையே என அவரிடம் அண்மையில் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.
“நான் தமிழில் பேசினால் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள். அதனால் பேசுவதில்லை. சொல்லித்தரும் வசனத்தை மட்டும் பேசிவிடுவேன்,” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.