இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ்.டோனி, ‘டோனி என்டர்டெய்ன்மண்ட்’ நிறுவனம் மூலம் ‘எல்ஜிஎம்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தம் மனைவி சாக்க்ஷியுடன் டோனி கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அதன் தொகுப்பாளினி, “நடிகர் யோகி பாபு நன்றாக கிரிக்கெட் விளையாடுவார். அவரை சிஎஸ்கே அணியில் சேர்த்துக்கொள்வீர்களா?” என்று டோனியிடம் கேட்டார். பின்னர் மேடையில் பேசிய டோனி இதற்குப் பதிலளித்தார்.
“யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். அவரை சிஎஸ்கே அணியில் இணைப்பதற்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.
“ஆனால் அதில் ஒரு நிபந்தனை. யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் நேரத்தில் சரியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும். பயிற்சி செய்வதற்கு சரியாக வர வேண்டும். அதற்கு சம்மதம் என்றால் நிர்வாகத்திடம் பேசுகிறேன்,” என்று சொன்னவர், இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார்.
“கிரிக்கெட் மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்தை வீச மாட்டார்கள். பந்தடிப்பாளரை நோக்கிதான் வீசுவார்கள். அதை யோகி பாபுவால் சமாளிக்க முடியுமா என்பதை அவரே முடிவு செய்துகொள்ளட்டும்,” என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார்.