மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மாவீரன்’ படத்தில் அவருடன் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்டிருக்கிறார்.
அந்த சாபம் பலிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதாகவும் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
‘மாவீரன்’ படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரம் செய்வதற்காக சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம் மலேசியா சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று நேராக துபாய் சென்று அங்கும் விளம்பரம் செய்தார்.
முன்னதாக சென்னையில் நடந்த விளம்பர நிகழ்ச்சியின்போது இயக்குநர் மிஷ்கின் பேசியபோது, “நடிகராக நான் பழகியது இல்லை. நடிகராக நடிக்கவேண்டும் என்றால் மிகவும் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. சிவகார்த்திகேயன் எத்தனை ஆண்டுகளாக இப்படி ஒழுக்கமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதற்காகவே அவருக்கு விருது கொடுக்க வேண்டும். ஒழுக்கமான நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துவிட்டார்.
“ரஜினி போன்று சிவா என நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள். ஆனால் அதை நான் உண்மையாக நினைக்கிறேன். ஏனென்றால் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வரும் பையன் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனை மிகவும் ஒழுக்கமானவர் என்று பலர் சொன்னதை எல்லாம் கேட்டு அவை எல்லாம் வெறும் கதை என நினைத்தேன். ஆனால் தற்போது அருகில் நின்று பார்க்கும்போதுதான் அது எல்லாம் உண்மை என்று புரிகிறது.
“சிவகார்த்திகேயன் ரொம்ப உண்மையானவர். அனைவரிடமும் அன்பாக பழகுவார். சிவகார்த்திகேயன் ஒரு 15 பேரை அடிக்கும் 40 சண்டைக் காட்சிகளை இரவு முழுவதும் படமாக்கினார் மடோன் அஸ்வின். அத்தனை ஷாட்களிலும் அவர்களை அடித்துவிட்டு 15 பேரிடமும் ‘மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா’, என்று இரவு முழுவதும் மன்னிப்பு கேட்டார்.
“விடிய விடிய மன்னிப்புக் கேட்டார். அது நடிப்பு இல்லை. அந்த ஒரு விஷயம் போதும் அவர் மிகவும் நல்ல பையன். 40 முதல் 50 ஆண்டுகள் நீங்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என சாபம் விடுகிறேன் சிவகார்த்திகேயன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மிஷ்கின் விட்ட சாபம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. “கடவுளே அந்த சாபம் கண்டிப்பாக பலிக்க வேண்டும்,” என்று பதிவிட்டு வருகிறார்கள்.
‘மாவீரன்’ படம் கண்டிப்பாக வெற்றியடையும் என நம்பிக்கையுடன் கூறி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் நடிக்க ரூ.25 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். முன்னதாக வெளியான ‘பிரின்ஸ்’ படம் சரியாகப் போகவில்லை. அதனால் தன் சம்பளத்தில் ரூ.5 கோடியை குறைத்து ரூ.25 கோடி வாங்கியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
‘மாவீரன்’ படம் மூலம் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். ‘மாவீரன்’ பட விழாக்களில் எல்லாம் தலையில் குல்லாவுடன்தான் கலந்து கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, “‘டாக்டர்’ படத்தில் என்னுடைய வேறு விதமான நடிப்பை பார்த்திருப்பீர்கள். அதைப்போல் இந்தப் படத்திலும் என்னுடைய வேறு விதமான நடிப்பை பார்ப்பீர்கள். படத்தில் காதல் காட்சிகளே இல்லை. வண்ணாரப்பேட்டை பாடலில் மட்டும் எனக்கும் அதிதிக்கும் காதல் இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மாவீரன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. வடசென்னை பின்னணியில் நடக்கும் கதை என்பது முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும் போதே தெரிகிறது. மேலும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு குரல் கேட்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் அடிக்கடி சிவகார்த்திகேயன் வானத்தைப் பார்த்துப் பயப்படுவதுபோன்ற காட்சிகள் வந்துகொண்டு இருக்கும். அதில் வானத்தில் இருந்து ‘வீரமே ஜெயம்’ என்று குரல் ஒலிக்கும். அந்தக் குரலுக்கு உரியவர் நடிகர் விஜய் சேதுபதி. அதற்கு சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், “என் அன்பு சகோதரன் விஜய் சேதுபதி, உங்கள் அன்பான செயலுக்கு நன்றி. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி,” என்று நன்றி தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடித்து வரும் ‘எஸ்.கே.21’ படத்திற்காக புது சிகையலங்காரம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்றுதான் குல்லா போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
‘எஸ்.கே.21’ படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ‘மாவீரன்’ விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ‘எஸ்.கே.21’ படத்தில் தன்னுடைய காட்சிகளை பிறகு எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து படப்பிடிப்பைத் தள்ளி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

