திரையுலகில் இருப்பவர்கள் எதுகுறித்தும் கவனத்துடன் கருத்து தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் சிக்கல்தான்.
இதற்கு அண்மைய உதாரணமாக இளம் நாயகி ஈஷா ரெப்பாவைக் குறிப்பிடலாம்.
தெலுங்குத் திரையுலகில் அம்மொழி தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் மற்ற மொழி நடிகைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளார் ஈஷா.
இதையடுத்து தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலர் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“தமிழ், மலையாளப் படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்குத் திரையுலகைப் பற்றி சிலாகித்துப் பேசுவதைக் கேட்டு இருக்கிறேன்.
“ஆனால் தெலுங்கில் பிற மொழி நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் செல்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
“பிற மொழிகளிலும் இப்படித்தான் நடக்கிறது. மொழி தெரியவில்லை என்பதையும் ஒரு தகுதியாகக் கருதுகிறார்களா என்பது புரியவில்லை,” என்கிறார் ஈஷா ரெப்பா.
இவர் தமிழில், ‘ஓய்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

