காலஞ்சென்ற நடிகர் மயில்சாமியின் குடும்பத்தில் சொத்துகளைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக பிரச்சினை வெடித்துள்ளது என்ற தகவலை அவரது இரு மகன்களும் மறுத்துள்ளனர்.
மயில்சாமிக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே திரையுலகில் நடித்து வரும் நிலையில், இருவரின் மனைவிமார்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதாக அண்மையில் தகவல் வெளியானது. பின்னர் இருவரும் தங்கள் கணவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மூத்த மகன் அன்பு, குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். “ஒரு சிலருக்கு வேறு வேலை இல்லாததால் வதந்தியைப் பரப்புகிறார்கள். ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என்பது தெரியவில்லை,” என்கிறார் அன்பு.
கடந்த ஆண்டு சிவராத்திரியன்று சென்னையில் உள்ள கோவிலுக்குச் சென்று சிறப்புப் பூசையில் பங்கேற்றார் மயில்சாமி. பின்னர் திரும்பிய நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயில்சாமியின் மறைவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அப்போதும் அவரது மகன் அன்பு சில விளக்கங்களை அளித்திருந்தார்.