பிரான்ஸ் தமக்கு மிகவும் பிடித்தமான நாடு என்றும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வது வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார் நடிகை ஊர்வசி ரௌடேலா.
அண்மையில் படப்பிடிப்புக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றுள்ள இவர், இப்போது வரை பாதுகாப்பாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
“பாரிஸ் நகரில் நடந்து வரும் கலவரமும் வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கின்றன. உண்மையில் பயமாகவும் இருந்தது. என்னுடன் இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டேன்.
“இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டனர். தற்போது கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது,” என்று ஊர்வசி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தருணங்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்றும் அமைதியும் இணக்கமும் நிலவுவதற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

