விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இத்தகவலை அதன் நாயகன் சூரி உறுதி செய்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “குமரேசன் தயார். ‘விடுதலை பாகம் 2’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது,” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு ஒப்பனை செய்யப்படுவது தொடர்பான காணொளியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தில் காவலர் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி. முதன்முறையாக நாயகனாக நடித்துள்ள அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்ததாக வெற்றி மாறன் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. திரைக்கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்களை அடுத்து மேலும் சில காட்சிகளை மட்டுமே இப்போது எடுக்க உள்ளனர்.
படப்பிடிப்பை அடுத்த சில நாள்களில் முடித்து, படத்தை விரைவில் வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


