நடிகர் சிம்பு புதிய, வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வலம் வருகிறார்.
அதைப் பார்க்கும்போது அவர் சரித்திர கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தோன்றுகிறது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் மலேசியா சென்றிருந்த சிம்புவை கோலாலம்பூர் விமான நிலையத்தில் அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
பின்னர் கோலாலம்பூரில் நடந்த யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடினார் சிம்பு. எனினும், புதிய சிகை அலங்காரம் குறித்து அவர் வாய் திறக்கவில்லை.
இதையடுத்து, அவர் சரித்திரக் கதைக்களம் கொண்ட படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்துக்காகத்தான் அவர் தனது சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

