தமன்னா: நல்ல கதை மனதை பாதிக்க வேண்டும்

தமன்னா: நல்ல கதை மனதை பாதிக்க வேண்டும்

3 mins read
b784dc91-d54b-4110-a95e-ad14b6b860e3
தமன்னா. - படம்: ஊடகம்

ஒரு கதையைக் கேட்கும்போதே அது மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் தமன்னா.

இந்த அடிப்படையில்தான் தாம் படங்களைத் தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

“நடிக்க வந்த புதிதில் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும், அவை திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதே எனது கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வந்தது.

“ஆனால், இன்று திரையுலகம் நிறைய மாறிவிட்டது. ஓடிடி தளங்கள் எல்லாருக்குமான நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. நேரடியாக தொலைக்காட்சிகளில் படத்தை வெளியிடும் வாய்ப்பும் அமைந்துள்ளது.

“வெவ்வேறு தளங்கள், பலவிதமான கதாபாத்திரங்கள் என கலைஞர்கள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் பேசுகிறார் தமன்னா.

தாம் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் குறிப்பிடு பவர், இன்றளவும் தனக்கு ஏற்ற கதாபத்திரங்கள் அமைவதில் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

‘பப்ளி பவுன்சர்’ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிட்டும் என்று அறவே எதிர்பார்க்கவில்லை என்றும் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காகத் தாம் எப்போதுமே காத்திருக்கத் தவறுவதில்லை என்றும் சொல்கிறார்.

“ஒட்டுமொத்த இந்தியத் திரையுலக ரசிகர்களுக்கும் பொருத்தமான கதைகள் அமைய வேண்டும் என்றுதான் இப்போது திரையுலகத்தினர் விரும்புகிறார்கள்.

“குறைந்த செலவில் எடுக்கப்படும் படங் களைக்கூட பல்வேறு இந்திய மொழிகளில் ஒருசேர வெளியிட திட்டமிடப்படுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பே நான் அத்தகைய படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

“ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரு பாகங்களுமே இந்திய அளவில் பெரும் வரவேற்பையும் வசூலையும் கண்டன. ‘பான் இந்தியா’ என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற படங்கள் வெளிவர ‘பாகுபலி’தான் முக்கிய காரணம் என்பேன்.

“இந்தியாவில் பல்வேறு மொழிகளும் கலாசாரங்களும் உள்ளன. எனவே, அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப படங்களை உருவாக்குவது முக்கியம். அனைத்து மொழி களிலும் கவனம் செலுத்தினால் நாம் தோல்வி அடைய நேரிடலாம்.

“ஒரு தரமான படைப்பு உலக அளவில் வரவேற்கப்படும். உலக ரசிகர்களைச் சென்றடைவதற்கான வழிகளை அந்தப் படைப்பு தன்னால் கண்டறியும்,” என்கிறார் தமன்னா.

இந்தியாவின் உயரிய கலாசாரங்கள், கலைகளின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடுபவர், இந்தியச் சூழலுக்கு ஏற்ற கதைகளை படமாக்கும்போது அவை நிச்சயமாக உலக ரசிகர்களைக் கவரும் என்கிறார்.

“கலைத்துறையில் 20 ஆண்டுகளாக எனது பயணம் நீடித்து வருகிறது. திரைப்பட நடிகையாக நான் பக்குவப்பட்டிருக்கிறேன். எனவே, முன்பைவிட எனது பயணத்தை நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் மேற்கொள்ள முடியும்.

“அதே சமயம் எனக்காகப் பல சவால்கள் காத்திருக்கும் என்பதையும் உணர்கிறேன். இதுவரை எனக்கு வசதியாக இருந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வந்தேன். இனிமேலும் அவ்வாறு செய்ய மனமில்லை.

“சவால்களை எதிர்கொள்வதுடன், அவற்றை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் கதைகளைத் தேர்வு செய்கிறேன்.

“கேட்ட உடனேயே ஒரு கதை என் மனதில் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் அச்சப்படவோ யோசிக்கவோ வைக்கும் கதையாக இருந்தால், அவற்றை ஏற்று நடிக்க நான் தயார்,” என்கிறார் தமன்னா.

குறிப்புச் சொற்கள்