கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நண்பர்கள் தன்னை ‘பிகில்’ என்றுதான் அழைப்பார்கள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகிறது ‘கங்குவா’. இதில் திஷா பதானி, யோகிபாபு, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் பத்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஐந்து விதமான தோற்றங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் சூர்யா. இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் அவர் பேசியது தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது. அதில், கல்லூரியில் படித்தபோது தமக்குப் பாட வராது என்றும் நன்றாக விசில் அடிக்க வரும் என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
“கல்லூரியில் படிக்கும்போது நன்றாக விசில் அடிக்க வரும். சத்தமா அடித்து அதிலேயே பாட்டுப்பாடுவேன். கல்லூரியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அதில் என் விசில் சத்தம்தான் கேட்கும். இதனால், என் நண்பர்கள் என்னை ‘பிகில்’ என அழைத்தார்கள்,” என்று சூர்யா பேசி உள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. அதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘பிகில்’ என்று வரும். இந்நிலையில், கல்லூரியில் தம்மை ‘பிகில்’ என்று நண்பர்கள் அழைத்ததாக சூர்யா கூறியுள்ளார். விஜய்யும் சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.