விக்ரமுடன் இணைந்து நடிக்கும் ‘தங்கலான்’ படத்துக்காக பல்வேறு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டுள்ளார் மாளவிகா.
கடந்த 4ஆம் தேதி இவரது பிறந்தநாளையொட்டி புதிய சுவரொட்டியை வெளியிட்டு ‘தங்கலான்’ படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இப்படத்தில் ஆரத்தி என்ற வேடத்தில் நடித்துள்ளார் மாளவிகா. கையில் கத்தியுடன் கூடிய வேல்கம்பு ஒன்றை ஏந்தியபடி இவர் காட்சியளிக்கும் புகைப்படம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
அதில், கழுத்து நிறைய பாசி கலந்த மாலைகளும் கையில் காப்பும் தலையில் கிரீடமும் அணிந்துள்ளார் மாளவிகா. சிறிய அணிகலன்களையும் அணிந்து மாறுபட்ட தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பது படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்கு முந்திய காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் மாளவிகா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக படப்பிடிப்பின்போது அவர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாராம். எனினும் அனைத்தையும் சமாளித்து நடித்து முடித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பை படக்குழுவினர் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

