நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இமய மலைக்குச் சென்றுள்ள ரஜினி அங்கு தனது நண்பர்களைச் சந்தித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை, அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
‘ஜெயிலர்’ படம் வெளியீடு கண்ட மூன்று நாள்களில் 300 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இந்நிலையில், தனது இமயமலைப் பயணத்தின்போது முதலில் ரிஷிகேஷ் சென்றடைந்தார் ரஜினி. அங்கு தயானந்த சுவாமி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து தியானத்திலும் நண்பர்களைச் சந்திப்பதிலும் அவர் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
“இமயமலையில் உள்ள ஆசிரமங்களில் வழங்கப்படும் உணவைத்தான் ரஜினி சாப்பிடுகிறார். ஆசிரம அறைகளில் தங்குகிறார்.
“தன் நண்பர்களையும் தாம் இருக்கும் இடத்துக்கு வரவழைத்துப் பேசி மகிழ்கிறார். தனக்கென அவர் சிறப்பு வசதிகள் ஏதும் செய்துகொள்ளவில்லை.
“நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் தமக்கு பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது. தியானம் மூலம் மனம் அமைதியாகிறது என அவர் சொல்கிறார்,” என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பயணத்தின்போது ரஜினி தன்னுடைய கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும் பெரும்பாலான அழைப்புகளை ஏற்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

