அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து, தமது 50வது படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராயர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. வடசென்னையை மையமாகக் கொண்ட அதிரடி நாயகனாக தனுஷ் நடிக்கிறார்.
இதற்காக, சென்னையின் பிரபல ‘ஸ்டூடியோவில்’ பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் இருவரும் நடித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தனுஷ் திடீரென செய்த ஒரு செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. பள்ளிப்பருவத்தில் தம்முடன் படித்த நண்பர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு நாள் முழுவதுமே அவர்களுடன் நேரத்தை தனுஷ் செலவிட்டு இருக்கிறார். பொதுவாகத் திரையுலகில் நாயகனாக உயர்ந்த பின்னர் வந்த பாதையையும் தன்னுடன் பயணித்தவர்களையும் மறந்துவிடுவார்கள். ஆனால் தனுஷ் தமது பள்ளிக்கூட நண்பர்களைச் சந்தித்ததை சமூக ஊடகவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

