இந்தியத் திரையுலகம் வேகமாக வளர்ந்து வருகிறது என்கிறார் நடிகை தமன்னா.
மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் தமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழில் ரஜினிகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி ஆகிய இருவருமே எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுடன் இணைந்து நடித்ததை பெரிய சாதனையாகக் கருதுகிறேன். இதன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது.
“என் சினிமா பயணத்தில் அனைத்துவிதமான நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறேன். நான் எப்போதுமே என்னுடன் நடிக்கும் நடிகர்களின் வயதை பற்றி கண்டுகொள்ள மாட்டேன். நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே பார்க்கிறேன்,” என்கிறார் தமன்னா.
ஒரு திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் குறிப்பிடுபவர், தனக்கான பாத்திரங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பதாகக் கூறுகிறார்.
“கதாபாத்திரம் பிடித்திருந்தாலே போதும். வயது வரம்பினால் எதுவும் மாறாது. சினிமாவை ஒரு ஓட்டப் பந்தயம் போல் கருதக்கூடாது. சிறு வயதிலேயே நான் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். இங்கு வெற்றி, தோல்வி என்பது நம் கையில் இல்லை. கூட்டு முயற்சிதான் முக்கியம். “சில வெற்றிகளுக்கு நான் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதை நினைத்து பெருமை கொள்ளக்கூடாது,” என்கிறார் தமன்னா.
திரைத்துறையில் முன்னுக்குச் செல்ல வேண்டும் என்றால் கடின உழைப்பு அவசியம் என்று குறிப்பிடுபவர், உழைப்புடன் கூடிய பயணம்தான் வெற்றி தரும் என்கிறார்.
அனைத்துத் துறையிலும் மாற்றம் என்பது இயல்புதான் என்றும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தொடங்கியே இடத்திலே தனித்து விடப்படுவோம் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
“தனித்து விடப்பட வேண்டும் என்று யாரும் ஆசைப்பட மாட்டார்கள். வளர்ச்சியைத்தான் விரும்புவார்கள். அதற்கு புதிய முயற்சிகளைக் கையாள வேண்டும். அப்போதுதான் இந்தப் பயணம் இன்னும் நீளும்,” என்று சொல்லும் தமன்னா, இணையத் தொடர்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் நடித்த ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ என்ற இணையத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் இவரது நடிப்பு அருமையாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டுகின்றனராம். குறிப்பாக ரசிகைகளின் பாராட்டு தமக்கு மேலும் ஊக்கமளிப்பதாகச் சொல்கிறார்.
“என்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் பொருட்படுத்தவதே இல்லை. யாரோ ஏதோ பேசுகிறார்கள், ஏதோ நினைத்துக் கொள்கிறார்கள். எனவே கிசுகிசுக்கள் குறித்து கவலைப்படுவது கிடையாது.
“அதேபோல் எனது திருமணம் குறித்தும் பலவிதமான தகவல்கள் வெளியாகின்றன. இதுவரை திருமணம் குறித்து எதுவும் யோசிக்கவில்லை. அப்படி திட்டமிட்டதும் முதலில் ரசிகர்களிடம்தான் சொல்வேன்,” என்று சொல்லும் தமன்னா, இன்றுள்ள இளம் நாயகிகளின் திறமை தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்கிறார்.
‘போலா ஷங்கர்’ தெலுங்குப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தபோது அவர் மிகச் சிறந்த நடிகை என்பதை உணர முடிந்ததாகக் குறிப்பிடுபவர், கீர்த்தியால் அனைத்து வகை உணர்வுகளையும் நேர்த்தியாக கையாள முடிவதாகப் பாராட்டுகிறார்.
தாம் திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை யாரையுமே தாம் போட்டியாகக் கருதியதில்லை என்கிறார் தமன்னா. திரைத்துறை மீதான பக்தி, தனது ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவைதான் இன்று தாம் அடைந்துள்ள இடத்தைப் பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.
“உடன் நடிக்கும் நடிகைகளை, குறிப்பாக கதாநாயகிகளை போட்டியாகக் கருதியதே இல்லை. அவர்கள் அனைவரும் எனது தோழிகள்தான். எல்லாருக்கும் உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் திரையுலகம் மேலும் வளர வேண்டும் என்பதுமே எனது விருப்பம்,” என்கிறார் தமன்னா.