நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
`சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதன்பின் ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனிடையே அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் ‘அன்புக்கினியாள்’ மற்றும் ‘தும்பா’ படங்களில் நடித்த நடிகையுமான கீர்த்தி பாண்டியனைத் திருமணம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியானது.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டாலும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம், செப்டம்பர் 13ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும்தான் அழைப்பு விடுக்கப்படுமாம்.