தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தெலுங்கில் ‘குஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் செப்டம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அப்படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின் அமெரிக்கா சென்றார் சமந்தா.
அங்கு நடைபெற்ற ‘இந்தியா டே பரேட்’ நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டார். அவருக்கு நியூயார்க் வாழ் இந்தியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேரணியில் கொளுத்தும் வெயிலில் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி நடந்து சென்றார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் சமந்தாவுடன் பங்கேற்றார்.
கூட்டத்தினரிடையே சமந்தா பேசும்போது “இன்று இங்கு இருப்பது உண்மையாக மிகப்பெரிய கௌரவம். இந்திய கலாசாரம், இந்திய பாரம்பரியம் எவ்வளவு சிறந்தது என்பதை நீங்கள் எனக்கு புரியும்படி செய்தீர்கள்.
“இன்று நான் பார்த்த இந்த கணங்கள் என் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நின்றுவிடும். இந்த அரிய கௌரவம் எனக்கு கிடைக்கும்படி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி. என் ஒவ்வொரு படத்தையும் ஆதரிக்கும் அமெரிக்க மக்களுக்கும் நன்றி’’ என்றார்.
நியூயார்க் நகரத்தின் நினைவுகளாக சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கனவுகள் உருவாகும் இடம் நியூயார்க் என்று சொல்வார்கள். இங்கு எனது முதல் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று எனது வாழ்க்கை ஆரம்பமானது.
“எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் பயந்திருந்த ஒரு சிறு பெண் அதை எப்படி சாதித்தார். ஆனாலும், பெரிய கனவைக் காணும் அளவுக்கு தைரியமானாள்! 14 ஆண்டுகளக்குப் பிறகு இன்று மீண்டும் நியூயார்க்கில் இருக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா தெலுங்கில் அறிமுகமான படமான ‘ஏ மாய சேசவே’ அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது. அன்று முதல் இன்று வரையிலும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் சமந்தா.

