கடந்த 2021ஆம் ஆண்டின் சிறந்த வட்டார (பிராந்திய) திரைப்படத்திற்கான தேசிய விருதை ‘கடைசி விவசாயி’ திரைப்படம் பெற்றுள்ளது.
மணிகண்டன் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இதில் நடித்துள்ள நடிகர் நல்லாண்டிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மாயாண்டி என்ற அப்பாவி விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நல்லாண்டியின் எதார்த்தமான பேச்சும் உடல்மொழியும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
எனினும் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் உயிருடன் இல்லை என்பதுதான் பெரும் சோகம்.
‘கடைசி விவசாயி’ படம் திரை காணும் முன்பே நல்லாண்டி உடல்நலம் குன்றியிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருது கிடைத்திருப்பது மனநிறைவு அளிப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நல்லாண்டியின் இயல்பான நடிப்பை பாராட்டும் விதமாக சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

