ஐந்து ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. அவருக்கு திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனியிசைக் கலைஞராக ‘ராப்’ பாடல்களை வெளியிட்டு பிரபலமடைந்த ஆதி, இப்போது திரைப்பட இயக்குநராகவும் உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார் ஆதி.
“புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வருகிறேன். எனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாகக் கொண்டோருக்கு உதவும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் ஆதி.
இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று குறிப்பிட்டுள்ள அவர், வேறு பணிகளைச் செய்துகொண்டே ஆய்வு மேற்கொள்வது சவாலாக இருந்தது என்கிறார்.
“அடுத்து ‘பி.டி. சார்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். அதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன்,” என்கிறார் ஆதி.

