தலைக்கவசம் என்பது உயிர் காக்கும் கருவி என்பதை மக்கள் உணர வேண்டும் என்கிறார் நடிகை தான்யா ஹோப்.
சாலை விபத்துகளில் சிக்கி பலரும் மாண்டுபோக தலைக்கவசம் அணியாததுதான் முக்கியக் காரணமாக உள்ளது என்று சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
ஏ.குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள ‘வெப்பன்’ திரைப்படத்தில் வசந்த் ரவியும், தான்யா ஹோப்பும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஹெல்மெட் பேரணி’ நடத்தப்பட்டது.
இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இதில் தான்யாவும் பங்கேற்று சிறிது தூரம் புல்லட் ஓட்டிச் சென்றார்.
“மனித உயிர் விலை மதிக்க முடியாதது. அதைப் பாதுகாக்க சில ஆயிரங்கள் செலவு செய்வதில் தவறில்லை. இதை உணர்த்தவே விழிப்புணர்வுப் பயணத்தில் நானும் பங்கேற்றேன்,” என்று கூறியுள்ளார் தான்யா.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் இளையர்கள் இதற்குப் பங்களிக்க வேண்டும் என்றும் தான்யா மேலும் தெரிவித்துள்ளார்.