தனது ஐம்பதாவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
‘மஹாராஜா’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நிதிலன் இயக்குகிறார்.
சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து நாயகர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் தோன்றுகிறார்.
இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்றார்.
“அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஐம்பதாவது படம் என்பது நிச்சயமாக எனது திரைப்பயணத்தில் முக்கியமான ஒரு மைல்கல்.
“இந்தப் பயணம் ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. ‘பாய்ஸ்’ மணிகண்டனின் அண்மைய பேட்டி ஒன்று பார்த்தேன். நவீன சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார்.
“அவர் ’பாய்ஸ்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக நானும் அப்போது என் புகைப்படத்தை அனுப்பி இருந்தேன். ஆனால், அந்தப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டேன். ’ஃபைவ் ஸ்டார்’ பட வாய்ப்பும் அப்படித்தான் கைநழுவிப் போனது,” என்றார் விஜய் சேதுபதி
நடிகர் மணிகண்டன் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியில் அனுராக் தயாரிப்பில் தாம் நடிப்பதாக இருந்தது என்றும் சில காரணங்களால் அதுவும் நடக்காமல் போய்விட்டது என்றும் கூறினார்.