‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றது குடும்பத்துடன் சுற்றுலா சென்று திரும்பிய உணர்வை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார் ‘சிருஷ்டி டாங்கே’.
இந்தப் படத்தில் இவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைசூரில் 35 நாள்களுக்குப் படப்பிடிப்பு நடைபெற்றபோது பட நாயகன் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், ராதிகா, வடிவேலு, ரவி மரியா என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் கலந்து பேசவும் பழகவும் வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார்.
“இந்தப் படத்தில் லட்சுமி மேனன், மகிமா நம்பியார் போன்ற முன்னணி நாயகிகளும் உள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும்.
“ராகவா லாரன்ஸ் எந்தவிதமான பந்தாவும் இல்லாத கதாநாயகன். அவர் அரங்கில் இருந்தால் எல்லாரையும் ஏதாவது சொல்லி சிரிக்க வைப்பார். முப்பத்து ஐந்து நாள்களும் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார்.
“இடையில் சில நாள்களுக்கு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தகவல் எங்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார். தம்மால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
“தொடக்கத்தில் அவருடன் இணைந்து நடிப்பது குறித்து ஒருவித தயக்கமும் பயமும் இருந்தது. ஆனால் அவருடன் பேசிப் பழகியதும் எல்லாம் எளிதாகிவிட்டது,” என்கிறார் சிருஷ்டி டாங்கே.
மைசூரில் படப்பிடிப்பு இல்லாத நாள்களில் மொத்த படக்குழுவும் காலையில் கிளம்பிச் சென்று இரவுதான் தங்கு விடுதிக்குத் திரும்புமாம். படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவேளைகளில் அரட்டை அடிப்பது, சீட்டு விளையாடுவது, திரைப்பாடல்களைப் பாடுவது எனக் கொண்டாட்டமாக பொழுது கழிந்திருக்கிறது.
“எனக்கான காட்சிகள் இல்லாத நாள்களிலும் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து மற்ற காட்சிகள் படமாக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதையும் வசனங்களும் என்னைக் கவர்ந்துவிட்டன. நானும் சராசரி ரசிகையாக மாறி, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தேன்.
“நான் தமிழில் சரளமாகப் பேசுவேன் என்பது இயக்குநர் பி.வாசுக்கு தெரியாது. குறிப்பிட்ட ஒரு காட்சியில் என் முகத்தை ‘குளோஸ் அப்’ முறையில் காட்டும்போது, நான் நீளமாக வசனம் பேச வேண்டியிருந்தது.
“என்னால் அவ்வளவு நீளமான வசனத்தைப் பேச முடியாது என்று இயக்குநர் நினைத்திருந்தார். ஆனால் நான் விடவில்லை. என்னால் பேச முடியும் என்று கூறி, அவ்வாறே பேசி, நடித்தேன். காட்சி படமாக்கப்பட்டதும் இயக்குநர் பி.வாசு பலமாகக் கைத்தட்டி என்னைப் பாராட்டினார். அதையடுத்து ஒட்டுமொத்த படக்குழுவினரும் கைத்தட்டினர். அதைக் கண்டு என் கண்கள் குளமாகிவிட்டன. அந்தத் தருணத்தை வாழ்நாளில் மறக்க இயலாது,” என்று நெகிழ்கிறார் சிருஷ்டி டாங்கே.
இது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் தன் மனதில் தன்னம்பிக்கையை விதைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய அனுபவங்கள்தான் எத்தகைய சவால்களையும் சமாளிக்க கைகொடுக்கும் என்கிறார்.
“என்னைவிட அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகையர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பின்போது அவர்களுடைய நடிப்பை அருகில் நின்று கண்டு ரசித்தேன்.
“அதேசமயம் இவர்களுக்கு இணையாக நம்மால் நடிக்க இயலுமா எனும் சந்தேகமும் ஒருவித பயமும் மனதை ஆட்கொண்டது. அப்போதுதான் நான் குறிப்பிட்ட நீளமான வசனத்தைப் பேசி நடிக்க வேண்டும் என்று இயக்குநர் பி.வாசு கூறினார்.
“அந்த வாய்ப்புதான் என் மனப்போக்கை முற்றிலுமாக மாற்றி அமைத்தது. அனைவரது முன்னிலையிலும் சிறப்பாக வசனத்தைப் பேசி நடித்ததும் அதற்கு இயக்குநர் கைத்தட்டி பாராட்டியதும் நான் எதிர்பாராத ஒன்று.
“அதன் பிறகு எப்படிப்பட்ட காட்சியிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்கிறார் சிருஷ்டி டாங்கே.